ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
தள்ளிப்போகும் விஜய்யின் பதவியேற்பு விழா; முட்டுக்கட்டை போடும் கவர்னர்? - நிலவரம் என்ன?
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார் விஜய். நாளை (மே7) நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால், இப்போது கிடைத்திருக்கும் தகவல்படி விஜய்யின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் சூழல் இல்லை என தெரியவருகிறது.

நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றிருந்தது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை தவெக எட்டவில்லை. தங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. அதன்படி மதவாத சக்திகளுக்கு துணைபோகக் கூடாது என்பதை நிபந்தனையாக விதித்து காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களுக்கும் தவெக ஆதரவளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, விஜய் இன்று மதியம் 3:30 மணிக்கு கிண்டி லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமைக் கோரினார். அதேசமயத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்திலும் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வை நாளை பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், ஆளுநர் விஜய்யிடம் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களின் பட்டியலை கொடுக்குமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும், அப்படி கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் விஜய்யின் பதவியேற்பு விழா நாளை நடக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. நாளை பதவியேற்பு விழா நடக்காத பட்சத்தில் நாளை மறுநாள் (மே8) பதவியேற்பு விழாவை நடத்த தவெக தரப்பில் திட்டமிட்டு வருகின்றனர். அதேமாதிரி, பெரும்பான்மையை பெற விசிக, கம்யூனிஸ்ட்டுகள், அதிமுக ஆகியோருடனும் தவெக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.











