'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?
திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் விஜய் வருகை தந்தார் விஜய். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

திருக்கோயில் பிரகாரம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோவிலுக்கு வந்த விஜய், பேட்டரி கார் மூலம் கடலுக்குச் சென்று கால் நனைத்துவிட்டு அங்கிருந்து சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது கோயில் வளாகத்தில் கூடியிருந்த த.வெ.க கட்சியினர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், அவர் மீது மலர் தூவி வரவேற்றனர்.
பட்டு வேட்டி சட்டையில் வந்த விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அளித்த வேலுடன் முருகப்பெருமானை தரிசிக்க கோவிலுக்குச் சென்றார். அதிகாலை 5 மணிக்கு நடை திறந்தபின் போது நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சுப்பிரமணியர், சந்நிதி முன்பு தரையில் அமர்ந்து மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையை தரிசனம் செய்ட்த அவர், சூரசம்கார மூர்த்தி சந்நிதியில் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டார்.

விஜய் வருகையால் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காரில் சாலை மார்கமாக திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த அவர், தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். விமான நிலையத்துக்கு விஜய் வருவதையோட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், விஜயை காண விமான நிலையத்திலும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.
சத்ரு சம்ஹார யாகத்தின் பலன்கள் குறித்து திருக்கோயிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் சிலரிடம் பேசினோம், ”எதிரிகள், தீய சக்திகள், வழக்குத் தொல்லைகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் மிகவும் சக்திவாய்ந்த பூஜை. எதிர்மறை சக்திகளை அழித்து, வெற்றி, மன உறுதி மற்றும் தைரியத்தை அருளுகிறது. கடன் தொல்லை, தொழில் நஷ்டம் நீங்குதல், செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் உடல், மன ஆரோக்கியம் மேம்படும். இது குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. எதிரிகளை வென்று அரசியல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சில அரசியல்வாதிகளிடையே காணப்படுகிறது.” என்றனர்.

முதல் முறையாக நடிகர் விஜய் இந்த சத்ருசம்கார பூஜையை நடத்தி இருக்கிறார். இந்த பூஜை அவரது அரசியல் பயணத்திற்கு சாதகமாக அமையுமா, அதன் தாக்கம் தேர்தல் முடிவில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது காலத்தின் போக்கில்தான் தெளிவாகும். தேர்தல் முடிவடைந்து பிற கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய திருச்செந்தூரில், சூரசம்ஹார மூர்த்தி சந்நிதியில் சத்ரு சம்ஹார பூஜையை நடத்திச் சென்றிருக்கிறார் விஜய்.
தமிழகத்தில் இத்தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு த.வெ.க-வின் தாக்கம்தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், த.வெ.க கணிசமான வாக்குகளைப் பெறும் எனவும், பல இடங்களில் வெற்றி தோல்வியையே த.வெ.க-தான் நிர்ணயிக்கும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்த நிலையில், பிரசன்ன ஜோதிடர்களின் அறிவுரைப்படியும் முக்கிய நிர்வாகிகளில் வேண்டுகோளுக்கு இணங்கவும் விஜய் இந்த பூஜையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் நிர்வாகிகளுக்கே இந்த விஷயம் உறுதிபடுத்தப்பட முடியாத நிலையில், யாகத்திற்கென ஆதவ் அர்ஜூனா தலைமையில் தனி டீம் செய்து முடித்திருக்கிறது. சத்தமே இல்லாமல் விஜய் திருச்செந்தூர் வந்து சென்றது தவெக வினரை உற்சாகம் கொள்ள செய்திருக்கிறது.
















