தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" - மதன் கார்க்கி| வரித்துணையே 19
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு, 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் வரும் 'நட்பு' பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் உரையாடினோம். 'நட்பு' சூழலில் தமிழ் சினிமா எத்தனையோ பாடல்களைக் கண்டிருக்கிறது. இந்தப் பாடலும் அந்தச் சூழலில் வழிவருவதுதான். ஆனால், இந்தப் பாடலில் முரண்பட்ட இரண்டு விஷயங்கள் நட்பு கொண்டிருப்பதாக உருவகப்படுத்தி எழுதியிருப்பார் மதன் கார்க்கி.
இந்தப் பாடல் பற்றி மதன் கார்க்கி, " "இந்தப் பாடலுக்கு 'நட்பு' என்கிற பொதுவான சூழல்தான் சொல்லப்பட்டது. இது மிகவும் தனித்துவமான ஒரு பாடல். வழக்கமாகத் திரையில் பார்க்கும் நட்பு போன்றதல்ல இது. இயக்குநர் ராஜமௌலி இந்தக் கதையைச் சொன்னபோதே அதன் விசித்திரம் எனக்குப் புரிந்தது. கதையில் அவர்கள் இருவரும் நண்பர்கள், ஆனால் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பது தெரியாமலேயே அந்த நட்பைத் தொடர்கிறார்கள். இரண்டு எதிரெதிர் துருவங்கள் இணைந்திருப்பது போன்ற அந்தத் தன்மை எனக்குப் பிடித்திருந்தது.

தெலுங்கில் இந்தப் பாடலை எழுதிய ஸ்ரீவெண்ணெல சீதாராம சாஸ்திரியின் வரிகளில் இருந்து ஒரே ஒரு வரியை மட்டும் ராஜமௌலி என்னிடம் சொன்னார். 'ஒரு தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு இருந்தால் எப்படி இருக்கும்?' என்பதுதான் அந்த வரி. அது கேட்ட மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்துவிட்டது. 'இது ஒன்றே போதும், நான் மீதியை எழுதி விடுகிறேன்' என்று கூறிவிட்டுப் பணியைத் தொடங்கினேன்.
இயற்கையில் எவையெல்லாம் ஒன்றோடொன்று மோதுமோ, அதையெல்லாம் நட்பாகக் கற்பனை செய்தேன். 'எங்காகிலும் பார்த்ததுண்டோ... தீயும் நீரும் சேர்ந்ததுண்டோ?' என்கிற வரிகள் அப்படி உருவானவைதான். ஒரு எரிமலைக்குழம்பு கடலில் கலக்கும்போது எழும் ஆவி, அது கடலின் வெற்றியா அல்லது நெருப்பின் வெற்றியா? காட்டாறு வேகமாய் வரும்போது குறுக்கே விழுந்து ஆற்றைத் தடுக்கும் மரம், அது ஆற்றின் தோல்வியா அல்லது மரத்தின் தோல்வியா? என இப்படியான முரண்களை வைத்தே அந்தப் பாடல் முழுவதையும் உருவாக்கினேன்.

இந்தப் பாடலை நான் ஹைதராபாத்தில் இருந்தபோது வெறும் மூன்று மணி நேரத்திலேயே எழுதி முடித்தேன். நான் பாடலை எழுதிவிட்டு இயக்குநரைப் பார்க்கச் சென்றபோது, அவர் ஒரு திருமண நிகழ்வில் இருந்தார். வானூர்தி நிலையம் செல்லும் அவசரத்தில் இருந்த என்னைத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தச் சத்தங்களுக்கு இடையிலும் பொறுமையாகக் கேட்டார். நான் எழுதிய வரிகளை அவர் ரசித்து ஒவ்வொரு வரியையும் குறிப்பிட்டார்.
'நாட்டு நாட்டு' பாடல் உலக அளவில் கவனம் பெற்றது. அதே சமயம், இந்த 'நட்பு' பாடலும் சர்வதேச மேடைகளில் இன்னும் சிறப்பாகக் கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். ஆனால், அது ஒரு கொண்டாட்டப் பாடல் என்பதால் அதற்கு அந்த வரவேற்பு கிடைத்தது. இசையமைப்பாளர் கீரவாணி எங்களிடம் பேசும்போது, 'நாங்கள் தெலுங்குப் பாடலைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம். ஒருவேளை தமிழ்ப் பாடலை அங்கு அனுப்பியிருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்கும், எல்லாம் நம் உழைப்புதான்' என்று குறிப்பிட்டார்.

இந்தப் பாடலை எழுதியபோது எனக்கு நெருக்கமான நண்பர்களின் நினைவுதான் வந்தது. எனக்கு நண்பர்கள் வட்டம் மிகச் சிறியது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சுதர்ஷன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ராம்குமார் ஆகிய இருவரும்தான் என் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாகச் சுதர்ஷனுடன் நான் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் வரை ஒன்றாகப் பயின்றேன். நாங்கள் இருவரும் நிறைய சண்டையிட்டுக் கொள்வோம், அதே சமயம் பல புதிய விஷயங்களைச் சேர்ந்து உருவாக்கியிருக்கிறோம். அந்தப் பயணத்தின் பிம்பம்தான் இந்தப் பாடல் வரிகளை எழுதும்போது என் கண்முன்னே வந்து நின்றது" என்கிறார் மதன் கார்க்கி.



















