நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - ...
நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் விவாதமானது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீதிமன்றப் படியேறி வாதிட்டவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆட்சேபணைகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைச் செயல்படுத்த 3 பெண் நீதித்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 7 நீதித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் சமூக விரோதக் கும்பல் 7 நீதித்துறை அதிகாரிகளையும் வளர்ச்சி அலுவலகத்தில் (BDO Office) வைத்து நள்ளிரவு வரை சிறைபிடித்தது. இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சூர்யகாந்த், ``இது நீதித்துறையின் மன உறுதியைக் குலைக்கச் செய்யப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நீதித்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கே தகவல் தெரிவிக்கப்பட்டும், இரவு 8.30 மணி வரை மாநில நிர்வாகம் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயர் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் தலைமை நீதிபதி நேரிடையாகத் தலையிட்டும், வாய்மொழி உறுதிமொழிகளைத் தாண்டி அதிகாரிகள் களத்திற்கு வரவில்லை. நள்ளிரவுக்குப் பிறகே அந்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலக் காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க உடனடியாக மத்தியப் படைகளை அனுப்புமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சிபிஐ (CBI) அல்லது என்ஐஏ (NIA) போன்ற மத்தியப் புலனாய்வு முகமை விரிவான விசாரணை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியது மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்திய அதிகாரிகளைப் பாதுகாக்கத் தவறியது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். டிஜிபி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்." எனக் கூறி இந்த வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












