சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?
``நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்தேன்!" - நடிகர் திலீப் விடுதலையான வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ல் படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சம்பவம் அப்போது அதிர்வலையை ஏற்படுத்தியது.
நடிகையைக் கடத்தியவர்கள் அவரை காரில் வைத்தே பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அதை வீடியோவாகப் பதிவுசெய்து, வீடியோவை பரப்பவும் செய்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில், நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரியவர, அவர் மற்றும் கார் டிரைவர் உட்பட மொத்தம் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் திலீப் இரண்டு மாதங்களிலேயே ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில், 8 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் டிசம்பர் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் பட்டியலில் முதல் 6 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், கடைசி 4 பேரை விடுதலை செய்தது.
விடுதலை செய்யப்பட்டவர்களில் A8 தான் நடிகர் திலீப். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் நடிகை, ``டிசம்பர் 12, 2025... 8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாள்களுக்குப் பிறகு, மிக நீண்ட மற்றும் வேதனையான பயணத்தின் முடிவில் நான் இறுதியாக ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் கண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
இந்தத் தருணமானது, என் வலியை ஒரு பொய் என்றும், இவ்வழக்கை புனைகதை என்றும் கூறியவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று நீங்கள் உங்களைப் பற்றியே மன அமைதியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும், இதில் A1 எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநர் அல்ல, என் ஊழியர் அல்ல, எனக்குத் தெரிந்தவரும் அல்ல.

2016-ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்துக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு சாதாரண நபர் அவர். அந்த நேரத்தில் நான் அவரை ஒன்றிரண்டு முறை மட்டுமே சந்தித்தேன்.
அதன் பிறகு, இந்தக் குற்றம் நடக்கும் நாள் வரை ஒருபோதும் அவரைச் சந்தித்ததில்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்தத் தீர்ப்பு பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கலாம். ஆனால், அது என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2020 தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்று நான் உணரத் தொடங்கினேன்.
அரசுத் தரப்பு கூட, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தது.
பல ஆண்டுகளாக, உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் பலமுறை அணுகி, இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று நான் தெளிவாகக் கூறினேன். வழக்கை அதே நீதிபதியிடமிருந்து மாற்றுவதற்கான ஒவ்வொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
பல வருட வலி, கண்ணீர், உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு வேதனையான உண்மையை நான் உணர்ந்துள்ளேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை.
மனிதர்களின் தீர்ப்புகள், இறுதியில் முடிவுகளை எவ்வளவு வலிமையாக வடிவமைக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு எனக்கு உணர்த்தியது.

ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன். இந்த நீண்ட பயணத்தில் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், அவதூறான கருத்துக்கள் மற்றும் பணம் பெற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதைகள் மூலம் என்னை தொடர்ந்து தாக்குபவர்களே, உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தொடர உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு" என்று குறிப்பிட்டு விசாரணை நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழந்ததற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.
நடிகை பட்டியலிட்ட காரணங்கள்,
`` * எனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இந்த வழக்கில் மிக முக்கியமான சான்றான மெமரி கார்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோது மூன்று முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது கண்டறியப்பட்டது.
* இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கிலிருந்து விலகினர், நீதிமன்றச் சூழல் அரசுத் தரப்புக்கு விரோதமாகிவிட்டது என்று தெளிவாகக் கூறினர். `இந்த நீதிமன்றத்திடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்' என்று அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார்கள். ஏனெனில் அது பாரபட்சமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள்.
* மெமரி கார்டு சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தேன். இருப்பினும், விசாரணை அறிக்கை ஒருபோதும் எனக்கு வழங்கப்படவில்லை.

* நான் ஒரு நியாயமான விசாரணைக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, இந்த வழக்கை அதே நீதிபதியே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இது என் மனதில் இன்னும் தீவிரமான சந்தேகங்களை எழுப்பியது.
* என் கவலைகளைத் தெரிவித்து, இதில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் கூட எழுதினேன்.
* இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களும் ஊடகங்களும் நேரடியாகப் பார்க்கும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நான் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தேன். அது நிராகரிக்கப்பட்டது." எனப் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை தனது அறிக்கையில், நடிகர் திலீப் உட்பட யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.





















