`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த...
நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்களால் நிறைந்து மொத்த வீடே மகிழ்ச்சியில் இருக்கிறது.
இந்நிலையில், அன்று இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையிலான ஒரு ராணுவக் குழு, ஆயுதப் போராளிக் குழு ஒன்றுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வாசுகியுடைய வீட்டின் அருகில் பதுங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஒரு சில காரணங்களால் அவ்வீட்டிற்குள்ளும் நுழைகிறது.

இந்நிலையில், மறுநாள் திருமணம், வீடு முழுவதும் சொந்தபந்தம், வீட்டிற்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை, வெளியே போராளிக் குழு, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றச் சூழல் உருவாகிறது.
பல இன்னல்களுக்கிடையில் நீளும் அந்த ஓர் இரவின் வழியாகப் போரின் வலியைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள 'நீளிரா' திரைப்படம்.
மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் போர்ச் சூழலுக்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக தன் தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் கபிலா வேணு.
இந்திய ராணுவ அதிகாரியாகக் கதை நகர்விற்கும், பரபரப்பைக் கடத்தவும் உதவியிருக்கிறது நவீன் சந்திராவின் பொறுப்பான நடிப்பு. ஒரே காட்சியில் தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்திக் கைதட்டல் வாங்குகிறார் ரூபா கொடுவாயூர்.
ஆக்ரோஷம், காதல் என்ற இருவழிப்பாதையைப் போராடிக் கடந்திருக்கிறார் சனந்த். வீட்டுப் பெரியவராக நமச்சிவாயம், ஆணவமான ராணுவ வீரராக ரோஹித் கொகாடே ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர, சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட், விது ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை.

ஓர் இரவு, ஒரு வீடு, அவ்வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் என மிகச்சிறிய கதைக்களத்திற்குள் ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் பதற்றத்தையும், எமோஷன்களையும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன்.
முக்கியமாக, ஒளியைக் கச்சிதமாகப் பயன்படுத்திய விதத்தாலும், ஆங்காங்கே வரும் கவித்துவமான ப்ரேம்களாலும் கதாபாத்திரங்களின் கையறுநிலையையும் இறுக்கத்தையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
அழுத்தமான எமோஷனையும், நிதானமான த்ரில் அனுபவத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.
சிவா பத்மயன் இசையில், வாகீசன் ராசய்யா குரலில் 'கலியான பைலா' பாடல் 'துள்ளல்' ரகம்!
எமோஷனை அடர்த்தியாக்கி, காட்சிகளை வீரியமாக்கியிருக்கிறது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் வரும் கே-வின் பின்னணி இசை.
80களின் இறுதியிலுள்ள ஈழத்தின் கல்யாண முறை, அக்கால வீடுகள், சினிமா டெக்குகள் எனக் கலை இயக்குநர் மார்டினின் எதார்த்தப் படையலுக்கு, சுபைர்-தரங்கேனி கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது.
ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன்.

சிறுவர்களின் விளையாட்டு, கல்யாண வீட்டுக் குதூகலம், உறவுகளுக்கிடையிலான செல்லச் சண்டைகள் என ஆர்ப்பாட்டமில்லாமல் வீட்டிற்குள்ளே இருந்து தொடங்கும் திரைக்கதை, வெளியுலகிற்குள் செல்ல செல்ல, போர்ச் சூழலையும், ராணுவ அடக்குமுறைகளையும் கதையோட்டத்துடனேயே சொல்லத்தொடங்குகிறது.
கல்யாண சடங்குகள், விஜயகாந்த் படங்கள், அச்சூழலிலிருக்கும் வாழ்வாதாரங்கள் என எக்கச்ச விவரணைகளுடன் நுணுக்கமாக விரிகிறது திரைக்கதை. இரவிற்குப் பின் த்ரில்லர் மோடுக்கு நகரும் படம், இடைவேளைக் காட்சி வரை பரபர பிடியை விடாமல் பற்றிக்கொள்கிறது.
முன்னாள் ராணுவ வீரரான வீட்டுப் பெரியவர், குடும்பத்தைக் காக்கும் வாசுகி, கல்யாணக் கனவிலிருக்கும் மணப்பெண், இளம் காதல் ஜோடி, குச்சியை வைத்து விளையாடும் சிறுவர்கள் என எல்லாத் தலைமுறை கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருப்பதும், அவற்றை தனித்தனியாகக் கிளைக்கதைகளாக விவரிக்காமல், மையக்கதையுடனேயே விவரித்திருப்பதும் திரைக்கதையை ஆழமாக்குகின்றன.
ராணுவத்தால் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு தாக்கங்களும் அழுத்தமாகப் பதிகின்றன.

டெக் சினிமாவிற்கு இடையில் ஓடும் இயக்கப் பிரசாரப் பாடல், ராணுவம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூடுதல் ஆடைகளை உடுத்தும் பெண்கள், மரக்குச்சிகளை துப்பாக்கிகளாகப் பாவித்து விளையாடும் சிறுவர்கள் எனக் குறியீடுகள் நிறைய வந்தாலும், அவை மேதாவித்தனமாகக் காட்சிப்படுத்தப்படாமல் எதார்த்தமாகவும் உயிர்ப்போடும் வருவது அவ்வீட்டிற்குள்ளே நம்மையும் ஓர் உறுப்பினராக்கிவிடுகிறது.
இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்திலேயே காட்சிகள் சுழல்வது போன்ற அயர்ச்சி சில இடங்களில் மேலோங்கினாலும், நுணுக்கமான விவரணைகள் அவற்றைக் களைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் பரபர பாதைக்கு மடைமாற்றிவிடுகின்றன.
'எல்லா ராணுவமும் ஒன்றுதான்', 'போரில் எப்படி அமைதியைத் தேடுவீர்கள்?', 'இந்த வீட்டிலாவது அமைதியை நிலைநாட்டுங்கள்' என எல்லா வசனங்களும் உரையாடல்களோடே எதார்த்தமாக வருகின்றன.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் vs இந்திய ராணுவத் தரப்பு என விரியும் உரையாடல்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

வசனங்களோ, நிறைய ஷாட்களோ இல்லாமல் மிகச் சில நொடிகள் மட்டுமே வரும் இறுதிக்காட்சி, கதையின் ஆன்மாவைப் பேசுகிறது.
திரைமொழி, அரசியல், புனைவாக்கம் என எல்லாவற்றிலும் கவனிக்க வைத்து, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னெடுப்பாக மாறியிருக்கிறது இந்த 'நீளிரா'.


















