Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
பணி நிறைவுபெறாத தக்கலை பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர்; போராடிய பா.ஜ.க; நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், மினி டைடல் பார்க் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடியாத நிலையில் அவசரகதியில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பத்மநாபபுரம் நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பணி முடிக்கப்படாத பேருந்து நிலையத்துக்குள் சென்று கண்ணில் கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு முன்னதாகப் பேருந்து நிலையத்துக்குள் நுழைய முயன்ற நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்களைப் போலீஸார் தடுக்க முயன்றனர். நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கவுன்சிலர்களைப் போகக்கூடாது எனச் சொல்ல போலீஸாருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி உன்னிகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி உன்னிகிருஷ்ணன் கூறுகையில், "தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையடையாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. பேருந்து நிலைய தரைத்தளத்தின் கான்கிரீட் பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. போதிய கால அவகாசம் இன்றி பேருந்துகளை இயக்கினால், தரைதளம் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவறை வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை. அதற்குள் எதற்காக அவசரப்பட்டுத் திறக்க வேண்டும்? பணி முடிந்த பிறகு முதல்வர் காணொலிக்காட்சி மூலமாவது திறந்து வைத்திருக்கலாம்.

இந்தத் திட்டம் சுமார் 6.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்கான முழு நிதியையும் அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித் தொகையை நகராட்சி நிதியிலிருந்து செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் காமராஜரின் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. பணிகளை இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக முடிக்காமல் இருந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்தகட்டப் போராட்டம் நடத்தப்படும்" என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்டு தி.மு.க-வைச் சேர்ந்த பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபனிடம் பேசினோம், "பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்கப்பட்டு ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் 10 நாட்கள் கடந்தால் பேருந்துகள் இயக்கலாம். மீதமுள்ள இடத்தில் பக்கச்சுவரை அகற்றி ஃபேவர் பிளாக் போட உள்ளோம். முதல்வர் வந்ததால் வாய்ப்பைப் பயன்படுத்தித் திறந்துள்ளோம். பா.ஜ.க-வினர் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள்" என்றார்.
















