ரூ. 50,000 பென்ஷன் கனவு: 40 வயதைத் தொட்ட Gulf NRI-கள் இந்தியாவில் சொகுசாக ரிட்டை...
’பாஜகவிடம் தவெக என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது’ – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க-வை பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் தலைவர் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறது. ஆய்ந்த கருத்துக்களை சொல்லி நாட்டின் வளர்ச்சிக்கு உதவினால் சரியாக இருக்கும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்ற உணர்வு தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. விசில் சின்னத்தை உலகத்துக்கு கொண்டு செல்ல குழந்தைகள் பணியாற்றி இருக்கிறார்கள். கட்சி கொடியினை மாணவர்கள் கையில் ஏந்தி வருவதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
குடியரசு தலைவரும், ஆளுநரும் ஒன்றுதான். குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன், ஆளுநர் மத்திய, மாநில உறவுகளை ஏற்படுத்துபவர். இதைச் சொன்னதுக்கு கிண்டல் செய்தார்கள். ‘ஆட்டுக்கு எப்படி வால் தேவையில்லையோ, நாட்டிற்கு கவர்னர் தேவையில்லை’ என கிண்டல் செய்தார்கள். நாங்கள் அது போல பண்ணவில்லை. எங்களை பொறுத்தவரை, கலைஞர் பட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்தபோது, இரு முறை பேசிய கீதம் ஒலிக்கப்பட்டது, அது தவறில்லை. அதுபோல தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்... எந்த இடத்தில் இருந்தாலும் கொண்டு வர வேண்டும் என்பது தலைவரின் லட்சியப் பயணம். அதை தெளிவாக ஆளுநர் செய்தார்.
டெல்டா பகுதியில் மழையில் 20 நெல்மூட்டைகள்தான் நனைந்தன. நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருப்பதற்கான பணிகளை உணவுத்துறை அமைச்சர் செய்துள்ளார். வருங்காலத்தில் மழையால் சிக்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று 45 நாள்கள்தான் ஆகின்றன. அதற்கான பணிகளை செய்ய எங்களுக்கும் கால அவகாசம் தேவை. முதல்வர் மேகதாது விவகாரத்தில் போதுவான விளக்கத்தைச் சொல்லி இருக்கிறார்” என்றார்.

பா.ஜ.க-விடம் ஆட்சி அமைக்க விடுங்கள் என த.வெ.க தரப்பில் கேட்கப்பட்டதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, “நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகின்றவர், அவருக்கு பதில் சொல்ல முடியாது. அவர் எங்களை தாக்குகின்றாரே ஒழிய , தி.மு.க பா.ஜ.க-வை தாக்கி கொண்டு இருக்கிறது. அங்கு சமரச முயற்சி செய்து விட்டு, மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்காக தி.மு.க-விடம் விண்ணப்பம் போட்டவர் அவர். இதை பேசுவது அழகாக இருக்காது. பாஜகவிடம் நாங்கள் என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது. ஆட்சி அமைத்ததற்கு பிறகு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்பதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரையும் பார்ப்பது இயற்கையான ஒன்று” என பதிலளித்தார்.













