"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" - ரெக்கார்ட் சேஸ் ச...
'பிளஸ் 2-வுக்குப் பின் என்ன படிக்கலாம்?' - வழிகாட்டி முகாம்: மாணவர்களின் கேள்வியும் பதிலும்
"பிளஸ் 2 முடிச்சாச்சு... அடுத்து என்ன?" - இது ஒவ்வொரு மாணவர் மற்றும் பெற்றோரின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எதிர்காலப் பாதையைத் திட்டமிடவும் கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய வழிகாட்டி முகாம் சென்னையில் சீரோடும் சிறப்போடும் இன்று (25.04.2026) நடைபெற்றது.
அங்கு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்குத் துறை சார்ந்த வல்லுநர்கள் அளித்த பதில்களும் இதோ!
கேள்வி 1: "ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயத்தால் பல மாணவர்கள் ஐ.ஐ.டி-யை எட்டாக்கனியாக நினைக்கிறார்கள். ஜே.இ.இ எழுதாமலேயே ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்துப் பட்டம் பெற ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?"
பதில்: "நிச்சயமாக! ஐ.ஐ.டி மெட்ராஸ் தற்போது BS in Data Science மற்றும் Electronic Systems ஆகிய நவீனப் படிப்புகளை வழங்குகிறது. இதற்கு ஜே.இ.இ தேவையில்லை. 12-ம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் (கலை, வணிகவியல் உட்பட எந்தப் பிரிவாக இருந்தாலும்) ஒரு மாத 'குவாலிஃபையர்' தேர்வின் மூலம் இதில் சேரலாம். வயது வரம்பும் கிடையாது!"

கேள்வி 2: "நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மருத்துவக் கனவு அவ்வளவுதானா? நீட் அவசியமில்லாத அதே சமயம் மருத்துவத் துறை சார்ந்த சிறந்த படிப்புகள் என்னென்ன?"
பதில்: "மருத்துவம் என்பது எம்பிபிஎஸ் மட்டும் அல்ல. நீட் தேவையில்லாத 30-க்கும் மேற்பட்ட 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' (கார்டியாக் டெக்னாலஜி, டயாலிசிஸ் போன்றவை) படிப்புகள் உள்ளன.
இவை தவிர பிசியோதெரபி மற்றும் நர்சிங் படிப்புகளும் மிகச் சிறந்த வேலைவாய்ப்பை வழங்குகின்றன. எய்ம்ஸ் போன்ற அரசு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றைத் தொடரலாம்"
கேள்வி 3: "வெளிநாட்டுக் கல்வி என்றாலே பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்களே... எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்ப மாணவர்கள் வெளிநாட்டில் இலவசமாகப் படிக்க முடியுமா?"
பதில்: "ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளின் பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
குறிப்பாக நர்சிங் படிப்பவர்களுக்கு அங்குப் படிக்கும்போதே மாதம் 50,000 ரூபாய் வரை உதவித்தொகையும் கிடைக்கும். இதற்குத் தேவைப்படுவதெல்லாம் முறையான மொழிப் பயிற்சியும் (IELTS/TOEFL) திட்டமிடலும் மட்டுமே."
கேள்வி 4: "கடல்சார் படிப்புகளில் (Nautical Science) சேர பெண்களுக்கு ஆர்வம் உள்ளது. ஆனால் அது பாதுகாப்பானதா? பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன?"
பதில்: "கடல்சார் துறையில் இன்று பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண் மாணவர்களை ஊக்குவிக்க ஆண்டுக்கு ₹1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒரு ஷிப்பிங் நிறுவனத்தின் 'ஸ்பான்சர்ஷிப்' பெற்றுப் படிப்பது உங்கள் வேலையை 100% உறுதி செய்யும். இது மிக அதிக ஊதியம் தரக்கூடிய ஒரு உன்னதத் துறை."

கேள்வி 5: "தனியார் கல்லூரிகள் தங்களை '100% வேலைவாய்ப்பு தரும் கல்லூரி' என்று விளம்பரம் செய்கின்றன. இதைப் பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும்?"
பதில்: "விளம்பரங்களில் வரும் 'பிளேஸ்மென்ட் அசிஸ்டன்ஸ்' (Assistance) என்பது வேலைக்கான கேரண்டி அல்ல. வேலை என்பது உங்களின் தனித்திறன்களையும் அரியர்ஸ் இல்லாத கல்வியையும் பொறுத்தது. ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன்பு, இந்திய அரசின் NIRF Ranking பட்டியலைச் சரிபார்க்கவும்."

கேள்வி 6: "கட்டிடக்கலை சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் உள்ளது. இதற்கும் பொறியியல் படிப்பு போல நுழைவுத் தேர்வுகள் உள்ளனவா?"
பதில்: "பி.ஆர்க் (B.Arch) படிக்க விரும்புபவர்கள் NATA என்ற நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயம். அண்ணா பல்கலைக்கழகத்தின் SAP வளாகம் மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரி போன்றவை இத்துறையில் மிகச்சிறந்தவை. வரைதல் மற்றும் கற்பனைத் திறன் கொண்ட மாணவர்களுக்கு இது சிறந்த களம்."



















