செய்திகள் :

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

post image

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் காவலர் ஒருவர் AK-47 துப்பாக்கி பயன்படுத்தி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

இவர் 15 வயது மாணவன் உள்பட மூன்று பேரை அந்தத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இவர்கள் மூவரும் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவர்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

நீட்
நீட்

மாணவர்கள் போராட்டத்தில் காவலர் ஒருவர் ஏ.கே-47 துப்பாக்கி பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் அதிகரிக்க, அந்தக் காவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள்...

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்:

"மாணவர் போராட்டத்தில் காவல் அதிகாரி ஒருவர் ஏகே-47 துப்பாக்கியால் சுடுவதைப் பாருங்கள். காவல் துறை விதிகளுக்கு மாறாக, இந்தியாவில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை.

ஒரு ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராடுவது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையாகும். இந்த நடைமுறை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பா.ஜ.க அரசுகள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் மீதும் ஏகே-47 துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுமா?

நாளைக்கு, எந்தவொரு காவல் அதிகாரியும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்தவொரு தலைவர், அமைச்சர் அல்லது முதலமைச்சர் மீது தன் இஷ்டத்திற்குத் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா?

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

அப்படி நடக்கும் பட்சத்தில், துப்பாக்கியால் சுட்ட நபர் மட்டுமே குற்றவாளியாக்கப்பட்டால் போதுமா? அந்த மாவட்ட எஸ்.பி (SP) மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாமா?

மத்திய உள் துறை அமைச்சரின் பொறுப்புடைமை இங்குத் தீர்மானிக்கப்பட வேண்டும், இல்லையெனில் மாநிலத்தில் அராஜகம்தான் ஆட்சி செய்யும். பீகார் மக்கள் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கவில்லை. இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல, நியமிக்கப்பட்ட முதலமைச்சர்."

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி:

"மாணவர்களுக்கு எதிரான இந்தச் ஒட்டுமொத்த அமைப்பும் கொடூரக் கொலைவெறி பிடித்து அலைகிறது.

பீகாரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடி அவர்களே, மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

அதற்கு பதிலாக, அவர்கள் மீது உயிரைப் பறிக்கும் தாக்குதல்களும் கொடூரங்களும் ஏவிவிடப்படுகின்றன. டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. பீகாரிலோ ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் அல்லது டெல்லி என எங்காக இருந்தாலும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான போக்குதான் தொடர்கிறது. நான் முன்பே கூறியது போல: இந்த அரசு நாணயமற்றது. உண்மையான சீர்திருத்தங்களைச் செய்வது இவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.

இவர்கள் தங்களின் வார்த்தைகளிலிருந்து பின்வாங்குவார்கள், மாணவர்களின் குரலை அடக்க அனைத்துச் சூழ்ச்சிகளையும் பயன்படுத்துவார்கள்.பிரதமர் மோடி அவர்களே, நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். மேலும் மாணவர்களைத் தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் — மாணவர்கள் மீது அல்ல."

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

"இது நமது வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மீதான மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக மாணவர்கள் அடித்து நொறுக்கப்படுவதும், இழுத்துச் செல்லப்படுவதும், குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுவதும் இதற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்!

பீகாரில் மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது உண்மையா?

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாணவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?

இதற்குப் காரணமானவர்கள் தங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துவிட முடியாது."

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்:

"ஏகே-47 என்பது ஒரு தாக்குதல் துப்பாக்கி. தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதப் பிரிவினரை (மாவோயிஸ்டுகள் போன்றோர்) எதிர்த்துப் போரிடும்போது மட்டுமே காவல் படைகளால் அது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுமக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அது ஒருபோதும் — எந்தச் சூழலிலும் — பயன்படுத்தப்படுவதில்லை.

பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட ஒரு காவலருக்கு, ஆயுதக் கிடங்கிலிருந்து (armoury) ஏகே-47 துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கவே கூடாது.

ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்திய காவலர் மட்டுமல்ல, அந்த ஆயுதத்தை வழங்கிய ஆயுதக் கிடங்குப் பொறுப்பாளரும் (armoury-in-charge) பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்."

சமஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்:

"பீகார் மாநிலம் சிவானில், ஆயுதங்கள் ஏதுமற்ற மாணவர்கள் மீது ஏகே-47 போன்ற கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்?

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர்களுக்காக நாடு முழுவதுமே கவலையில் ஆழ்ந்துள்ளது.

இச்சம்பவம் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களிடையே, குறிப்பாகப் பீகாரைச் சேர்ந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது."

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப... மேலும் பார்க்க

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக ம... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க

'ATM மூலம் அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்' - ஒடிசா போன்று கேரளத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்

​ஏ.டி.எம் மூலம் ​பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கா... மேலும் பார்க்க