"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெக...
பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் - சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!
பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் தகுதி பெறுபவர்களுக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்திலுள்ள தேசிய காவல் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்று வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் மற்றொரு ஆண் ஐபிஎஸ் அதிகாரி மீது அருகிலுளள காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், 'அகாடமியில் என்னுடன் பயிற்சி பெற்றுவரும் ஐபிஎஸ் அதிகாரியான உதயகிருஷ்ணா ரெட்டி, என்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். மொபைல் போனில் ஆபாச தகவல்களையும் படங்களையும் அனுப்பி வந்ததோடு கடந்த 9 மாதங்களாக என்னை மிரட்டியும் வந்தார். மற்றவர்கள் மத்தியில் என் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவதூறாக பேசுகிறார்" என்று தெரிவித்திருந்தார்.

இப்புகாரைத் தொடர்ந்து உதயகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்கும் காவல்துறையினருக்கு உத்தரவிடும் உயர் பொறுப்பில் அமரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















