'மனுவை அப்லோட் பண்ணா அப்பாயின்மென்ட் போனுக்கே வந்திடும்' - அமைச்சர் ராஜ்மோகன் அறையில் புதிய முயற்சி!
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ் மோகனின் அறைக்கு வெளியே டிஜிட்டல் முறையில் மனுக்களைப் பெறும் வகையில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கல்வி மற்றும் செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனின் அறைக்கு வெளியே QR கோர்டுடன் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
நம்முடைய போனில் அந்த QR கோர்டை ஸ்கேன் செய்தால் மனு விவரங்களை உள்ளிடுவதற்கான பகுதி திறக்கிறது.
அதில் நம்முடைய பிரச்னைகளைப் பதிவேற்றி விட்டு மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும். மொபைல் நம்பருக்கு ஒரு OTP வருகிறது. அந்த OTP-யை உள்ளிட்டால் அமைச்சரின் நேரத்தைப் பொறுத்து எப்போது சந்திக்கலாம் என்கிற அப்பாயின்மென்ட் விவரங்களும் போனுக்கே குறுந்தகவலாக வந்துவிடும் என்கின்றனர்.
நேற்றிலிருந்துதான் இந்தக் கருவி அமைச்சரின் அறைக்கு வெளியே பொறுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பேசும் அமைச்சர் தரப்பினர், ''மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை பார்வையாளர் நேரம் என ஒதுக்கப்பட்டிருந்தாலும் காலையிலிருந்து இரவு வரை அமைச்சரைச் சந்தித்து மனு கொடுக்க மக்கள் குவிகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே காத்திருக்க வேண்டியிருக்கிறது. அமைச்சர் அலுவல் பணிகளை மேற்கொள்வதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைச் சரிகட்டவே அப்பாயின்மென்ட் வழங்கவும் மனுக்களைப் பெறவும் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்தச் சேவையை இன்னும் மேம்படுத்துவோம்'' என்றனர்.
QR கோர்டு வசதி புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மனு கொடுக்க வந்த சிலர் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டனர். வயதானவர்கள் மற்றும் டிஜிட்டலைப் பற்றி விழிப்புணர்வு இல்லாத சாமானிய மக்களுக்காக அந்தக் கருவியின் பக்கத்தில் ஒரு உதவியாளரை நிரந்தரமாக நியமித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிலர் பரிந்துரைகளை முன்வைக்கின்றனர்.















