குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ....
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் தடாகம் அருகேயுள்ள 24-வீரபாண்டி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள அருள் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மின்மாற்றி அருகே ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர தணிக்கை மேற்கொண்டனர். மேலும் அந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கண்டறிய வனக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். இந்த முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழு விவரமும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















