செய்திகள் :

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

post image

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மாவட்ட அமைப்புகளை அதிகரிப்பது முதல் மூத்த நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றுவது வரை பல்வேறு மாற்றங்கள் குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், திமுகவின் அடுத்த தலைமுறையை மையப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவியை உருவாக்கி உதயநிதியை அந்தப் பொறுப்பில் நியமிப்பது குறித்து கட்சிக்குள் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.

அண்ணா அறிவாலயம்

இந்த ஆய்வில், அடிமட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம், நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்தல், தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சியின் அமைப்பை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தலைமை தயாராகி வருவதாக தெரிகிறது.

78 மாவட்டங்கள்… 100 ஆகிறதா?

திமுக-வில் தற்போது உள்ள மாவட்ட அமைப்புகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தற்போதுள்ள 78 மாவட்ட அமைப்புகளை சுமார் 100 ஆக அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாவட்டங்களை சிறிய அளவில் பிரிப்பதன் மூலம், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளை கவனிக்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல், தொடர்ந்து களப்பணிகளை கண்காணிப்பது, வாக்குச்சாவடி அளவில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, இளைஞர்களை கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடியும் என திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.

இந்த அமைப்பு மாற்றத்தில், வயது முதிர்ந்த மாவட்டச் செயலாளர்களின் பொறுப்புகளை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்களில் சிலரை மாவட்டப் பொறுப்பிலிருந்து மாற்றி, இளம் தலைமுறையைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து திமுக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், 70 வயதுக்கு மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களில் 13 பேரின் பெயர்கள் மாற்றம் தொடர்பான பரிசீலனையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அவர்கள்:

* காஞ்சிபுரம் தெற்கு – க.சுந்தர் – 72 வயது

* ராணிப்பேட்டை – ஆர்.காந்தி – 80 வயது

* திருவண்ணாமலை தெற்கு – எ.வ.வேலு – 75 வயது

* விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான் – 71 வயது

* சேலம் கிழக்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம் – 75 வயது

* ஈரோடு தெற்கு – சு.முத்துசாமி – 77 வயது

* தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை க.அன்பழகன் – 72 வயது

* புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி – 76 வயது

* மதுரை மாநகர் – கோ.தளபதி – 70 வயது

* தேனி தெற்கு – நா.ராமகிருஷ்ணன் – 77 வயது

* விருதுநகர் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – 77 வயது

* தூத்துக்குடி தெற்கு – அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – 74 வயது

* திருநெல்வேலி மேற்கு – இரா.ஆவுடையப்பன் – 81 வயது

என 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், வயது மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும், தேர்தல் செயல்பாடு, தொகுதியில் கட்சியின் நிலை, நிர்வாகத் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்படும் மூத்த நிர்வாகிகளை முழுமையாக ஓரங்கட்டாமல், அவர்களின் நீண்டகால அரசியல் அனுபவத்தை பயன்படுத்தும் வகையில் மாநில அளவில் முக்கியப் பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, பொன்முடி

துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஒருபுறம் மூத்த நிர்வாகிகளின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மறுபுறம் மாவட்ட அளவில் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு வழங்கவும் திமுக தலைமை திட்டமிடுவதாக தெரிகிறது.

திமுகவின் இந்த அமைப்பு மாற்றங்களில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் இருக்கும் உதயநிதிக்கு கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, கட்சியின் மாவட்ட அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், அந்த புதிய அமைப்பை ஒருங்கிணைக்கும் பொறுப்பை உதயநிதியின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

திமுகவில் ‘செயல் தலைவர்’ பதவி ஏற்கெனவே இருந்துள்ளது. 2017-ல் மு.க.கருணாநிதி உடல்நலக் குறைவால் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட முடியாத நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் திமுக தலைவரான நிலையில், செயல் தலைவர் பதவி தொடரவில்லை.

உதயநிதி
உதயநிதி

இந்த நிலையில், தற்போது அந்தப் பதவியை மீண்டும் உருவாக்கி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்குவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டால், மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவராகத் தொடரும் நிலையில், உதயநிதி செயல் தலைவராக கட்சியின் அன்றாட அமைப்பு மற்றும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையிலான அதிகார மையம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பொறுப்பு குறித்தும் கட்சிக்குள் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரைமுருகன்
துரைமுருகன்

வயது காரணமாக துரைமுருகனின் செயல்பாடுகளில் மாற்றம் தேவைப்படுவதாக கட்சிக்குள் கருத்துகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு மாற்றாக மற்றொரு மூத்த தலைவரை பொதுச்செயலாளர் பொறுப்புக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதேசமயம், துரைமுருகனுக்கு கட்சியின் உயர்மட்ட அளவில் வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதியைப் போலவே கனிமொழி கருணாநிதியின் அடுத்தகட்ட பொறுப்பும் திமுகவின் அமைப்பு மாற்றத்தில் கவனம் பெறும் விவகாரமாக உள்ளது.

தற்போது துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு கட்சியின் அமைப்பு மற்றும் கொள்கை ரீதியான பணிகளில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஸ்டாலின் - கனிமொழி
ஸ்டாலின் - கனிமொழி

இதனால், இந்த அமைப்பு மாற்றம் என்பது மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்ற அளவில் மட்டுமல்லாமல், திமுகவின் அடுத்த தலைமுறை அதிகார சமநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக கொடுத்த ‘Gen Z’ சவால்

2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் இளைஞர் வாக்காளர்களின் அரசியல் போக்கு அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்கள், டிஜிட்டல் பிரசாரம், புதிய தலைமுறை அரசியல் தொடர்பு ஆகியவற்றில் தவெக முன்னெடுத்த முயற்சிகள் திமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகளுக்கு புதிய சவாலை உருவாக்கியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவும் இளைஞர்களை கட்சியின் அமைப்புக்குள் அதிக அளவில் கொண்டு வரவும், டிஜிட்டல் தளங்களில் கட்சியின் செயல்பாட்டை வலுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

‘Gen Z DMK’ போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தவெகவின் டிஜிட்டல் அணிகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற மதிப்பீடு கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், சமூக வலைதளங்களில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கட்சியின் அடிப்படை அமைப்பிலேயே தலைமுறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக தெரிகிறது.

இந்தச் சூழலில், திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு மேற்கொள்ளப்பட உள்ள அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது, மூத்த நிர்வாகிகளுக்கு மாற்றுப் பொறுப்புகள் வழங்குவது, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய அமைப்பு மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிகிறது.

முப்பெரும் விழாவுக்கு முன் அறிவிப்பா?

திமுகவின் முப்பெரும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பாக கட்சியின் அமைப்பு மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், திமுகவின் மாவட்ட அமைப்பு தொடங்கி தலைமைக்கழகம் வரை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஸ்டாலின்

78 மாவட்டங்கள் 100 ஆக உயர்வு, 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்களின் மாற்றம், இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு, மூத்த நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள், பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம், உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் என திமுகவில் அடுத்தடுத்து முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றின் உச்சமாக, மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக கொண்டு வந்து, கட்சியின் அடுத்த தலைமுறை கட்டமைப்பை இப்போதே உருவாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதா? என்பதே தற்போது திமுகவுக்குள் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக... மேலும் பார்க்க

"பயமா? பதற்றமா?" - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற தவெக அரசு - அதிமுக கேள்வி

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13), தவெக அரசு 'என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டைச் சேர்ந்த 11 வகையான மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடைக்கு அந்த மது... மேலும் பார்க்க

'800க்கு 538 மதிப்பெண்' - 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்க... மேலும் பார்க்க