சட்டசபையில் `ராஜகுரு' விவகாரம் : ரதன் பண்டிட் நியமனத்தை திரும்ப பெற்ற தவெக அரசு...
முலாயம் சிங் யாதவ் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் மர்ம மரணம்! - போலீஸ் விசாரணை
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங் யாதவின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ்(38) அரசியலில் ஈடுபடாமல் தொழில் செய்து வந்தார்.
லண்டனில் எம்.பி.ஏ முடித்துவிட்டு லக்னோவில் பில்டராக இருந்து வந்தார். இது தவிர சொந்தமாக பல்வேறு இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார். இன்று காலை பிரதீக் யாதவை அவரது குடும்பத்தினர் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தார். அவரது உடலில் எந்த வித காயமும் தென்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தான் பிரதீக் யாதவ் இறந்ததற்கான காரணம் தெரிய வரும். பிரதீக் யாதவ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது பா.ஜ.க நிர்வாகியும், பிரதீக் மனைவியுமான அபர்னா யாதவ் வரவில்லை.
பிரதீக் யாதவிற்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்னை இருந்து வந்தது. நுரையீரலில் ரத்த கட்டி இருந்தது. அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். அதன் காரணமாக இறந்தாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.
பிரதீக் யாதவ் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சத்னாவிற்கு பிறந்தவர் ஆவார். பிரதீக் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு உலகின் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் லம்போர்கினி (Lamborghini) காரை ரூ.5 கோடிக்கு வாங்கியது சர்ச்சைக்குள்ளானது. ஆனால் தான் முறைப்படி வருமான வரி கட்டுவதாகவும், கடனில் கார் வாங்கி இருப்பதாகவும் பிரதீக் யாதவ் விளக்கமளித்து இருந்தார்.
பிரதீக் யாதவும் அவரது மனைவி அபர்னா யாதவும் எட்டு ஆண்டுகள் காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்ய மனுத்தாக்கல் செய்து இருப்பதாக பிரதீக் யாதவ் குறிப்பிட்டார். அபர்னா புகழை விரும்பக்கூடியவர் என்றும், குடும்பத்தை சீரழித்துவிட்டதாகவும் பிரதீக் குறிப்பிட்டு இருந்தார். பிரதீக் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.
முலாயம் குடும்ப பின்னணி
முலாயம் சிங் யாதவ் முதல் மனைவி மாலதி தேவி அகிலேஷ் பிறந்தவுடன் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன் பிறகு மாலதி 2003ம் ஆண்டு இறந்துபோனார். அடுத்த சில மாதங்களில் முலாயம் சிங் சத்னாவை திருமணம் செய்து கொண்டார். சத்னா ஏற்கனவே சந்திர பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மகன் பிரதீக் பிறந்த ஒரு ஆண்டில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகுதான் முலாயம் சிங் யாதவை திருமணம் செய்தார்.














