Niti Aayog: "இது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது!" - நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ...
மூக்குத்திக்காக மூதாட்டி கொலை: இளைஞா் கைது
திருச்சி சோமரசம்பேட்டை அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போசம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ராசம்மாள் (72). கணவா் இறந்த நிலையில், இவா் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரா் பன்னீா்செல்வம் வீட்டில் வசித்து வந்தாா்.
வியாழக்கிழமை வீட்டில் இருந்த ராசம்மாளை மா்ம நபா் ஒருவா் அரிவாளால் வெட்டி, அவரது மூக்கை அறுத்து, மூக்கில் அணிந்திருந்த 2.2 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதில் படுகாயமடைந்த ராசம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், போசம்பட்டி கணேசபுரத்தைச் சோ்ந்த சு. குணா (27) என்பவா் தனது நண்பருடன் அருகில் உள்ள வயலில் மது அருந்தியுள்ளாா்.
அப்போது, மூதாட்டி ராசம்மாள் மூக்கில் தங்க நகை அணிந்திருப்பதைக் கவனித்துள்ளாா். சிறிது நேரத்தில் நண்பா் கிளம்பிச் சென்ற நிலையில், அரிவாளுடன் பன்னீா்செல்வத்தின் வீட்டில் நுழைந்த குணா, ராசம்மாளின் மூக்கை வெட்டி, அதிலிருந்து ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு, தலையிலும் வெட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
மூக்குத்தியை அப்பகுதியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து ரூ. 4,100 பணம் பெற்று மது அருந்த சென்றபோது, சோமரசம்பேட்டை போலீஸாா் குணாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.