செய்திகள் :

போராட்டத்திற்குப் பின் அதிரடி: தேர்வு முறையைச் சீரமைக்க சிறப்பு குழு - மத்திய அரசின் திட்டம் என்ன?

post image

நீட் வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி என இந்தியாவின் கல்வித்துறை அமைச்சகம் மீது மாணவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாகவே டெல்லியில் மாணவர்களின் போராட்டம் வெடித்து, அதன் விளைவாக அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அதைத் தொடர்ந்து, தேர்வு முறை முழுமையாகச் சீரமைக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

இதன் பகுதியாக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் ஆறு துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த சிறப்புப் குழுவில் விண்வெளி விஞ்ஞானி, உளவுத்துறை அதிகாரி, ஐ.ஐ.டி இயக்குநர், சிவில் சர்வீஸ் அதிகாரி மற்றும் தளவாடப் பிரிவு நிபுணர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முறைகேடுகள் நடக்காதவாறு மிகவும் நம்பிக்கையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதே இந்தக் குழுவின் முதன்மை இலக்காகும். அத்துடன், வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த பணிக்குழுவைப் பற்றி அறிவித்த பிரதமர் மோடி, ``மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவுக்கு எதிராக வலுவான சட்டத்தைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பிக்கையானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பம் சரியாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகணி தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த அறிக்கை கிடைத்தவுடன், எதிர்காலத் தேர்வுகளை பாதுகாப்பானதாக மாற்ற அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவோம்" என்றார்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

குழு உறுப்பினர்களின் பங்களிப்பு என்ன?

நந்தன் நிலேகணியைத் தவிர, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் முன்னாள் அதிகாரி அம்ரித் லால் மீனா ஆகியோர் இந்த பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்களாவர்.

நந்தன் நிலேகணி (இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்):

இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பின் (UIDAI) முன்னாள் தலைவரான நிலேகணி, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அமைப்பின் முதன்மைச் சிற்பியாவார். தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவராக உள்ளார். முன்னாள் ஐஐடி மாணவரான நிலேகணி, தேர்வு முறைக்கான End-to-End குறியாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் தளத்தை உருவாக்கவும், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கவும் உதவுவார்.

நந்தன் நிலேகணி
நந்தன் நிலேகணி

எஸ். சோமநாத் (முன்னாள் இஸ்ரோ தலைவர்):

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட விண்வெளிப் பொறியாளரான எஸ். சோமநாத், சந்திரயான்-3 உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். சிக்கலான மற்றும் Zero-failure அமைப்புகளை நிர்வகித்த அனுபவம் கொண்ட இவர், தேர்வு அமைப்பில் எந்தவொரு சிறு தவறும் நேராத வகையில் பல அடுக்கு பாதுகாப்பு முறைகளை வடிவமைக்க உதவுவார்.

தபன் டேகா (முன்னாள் உளவுத்துறை தலைவர்):

ஹிமாச்சலப் பிரதேச கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான தபன் டேகா, 2022 ஜூன் முதல் 2026 ஜூன் வரை உளவுத்துறையின் இயக்குநராகப் பணியாற்றினார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் 26/11 மும்பை தாக்குதல் விசாரணைகளில் முக்கியப் பங்காற்றிய இவர், தேர்வு முறையை ஹேக்கிங், வினாத்தாள் கசிவு மற்றும் உள் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த உதவுவார்.

காமகோடி
காமகோடி

வி. காமகோடி (சென்னை ஐஐடி இயக்குநர்):

கணினி விஞ்ஞானியான காமகோடி, ஜனவரி 2022 முதல் சென்னை ஐஐடி இயக்குநராக உள்ளார். மத்திய அரசின் நுண்செயலி வளர்ச்சித் திட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு கல்வித் திட்டத்திற்கும் தலைமை தாங்குகிறார். கணினி அறிவியல் நிபுணத்துவம் கொண்ட இவர், தேர்வுத் தயாரிப்பு, திருத்துதல் மற்றும் முடிவுகளில் முறைகேடுகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Machine Learning பயன்பாடுகளைப் பரிந்துரைப்பார்.

அனிதா கர்வால் (முன்னாள் கல்விச் செயலாளர்):

36 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவம் கொண்ட 1988-பேட்ச் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், சிபிஎஸ்இ தலைவர் (2017-2021) மற்றும் பள்ளித் கல்வித் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய இவரது அனுபவம், தேசிய தேர்வு முகமையில் (NTA) செய்யப்பட வேண்டிய கொள்கை ரீதியான சீர்திருத்தங்களுக்கு உதவும்.

அம்ரித் லால் மீனா
அம்ரித் லால் மீனா

அம்ரித் லால் மீனா (தளவாடங்கள் மற்றும் பொது நிர்வாக நிபுணர்):

பீகாரின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அம்ரித் லால் மீனா, விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடப் பிரிவில் (Logistics) வல்லுநர் ஆவார். அச்சிடும் இடத்திலிருந்து தேர்வு மையங்கள் வரை வினாத்தாள்கள் பாதுகாப்பாகவும் முறைகேடு இன்றியும் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய இவர் உதவுவார் எனக் கூறப்படுகிறது.

'தமிழக அரசின் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும்..!'- பாமக வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி 2025-26 ஆம் ஆண்டிற்கான உத்தேச பொருளாதார அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்... 1. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைந்துள்ளது. 2. சொந்த வரி... மேலும் பார்க்க

'ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி!' - முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்... மேலும் பார்க்க

'CJP' போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?

சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படு... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!

ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான... மேலும் பார்க்க

`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், ... மேலும் பார்க்க