``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயந...
மேற்கு வங்கம்: கட்சித் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்!? - TMC பரபரப்பு நகர்வு
மேற்கு வங்கத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. தன் வலுவான குரலாலும், உறுதியான நடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அவரின் குரலுக்கென தனி பலம் இருந்தது. ஆனால், இப்போது அவர் மாநிலத்தில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் இந்தியா அளவில் விவாதமாகியிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.

குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காய்கள் நகர்த்தப்பட்டன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்று, தற்போது மம்தா பானர்ஜி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவரை தேர்வு செய்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான இந்த அதிருப்திக் குழு, கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பதவியில் உள்ள மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட சுமார் 500 திரிணாமுல் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொல்கத்தாவின் முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட மம்தா பானர்ஜியின் நெருங்கிய கூட்டாளிகள் பலரும் இந்த அதிருப்தி அணியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், அதிருப்தியாளர்கள் 30 பேர் கொண்ட தேசிய செயற்குழுவை அமைப்பதாக அறிவித்தனர். மேலும், தாங்கள் குறிப்பிடும் "உண்மையான" திரிணாமுல் காங்கிரஸின் சட்டப்பூர்வமான அமைப்பு ரீதியான மையமாக இந்தக் குழுவை முன்னிறுத்தினர். அதைத் தொடர்ந்து, அதிருப்திப் பிரிவு எம்.எல்.ஏ. அரூப் ராயை குரல் வாக்கெடுப்பு மூலம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
மேலும், புதிய கட்டமைப்பில் மூத்த தலைவர்களுக்கு உடனடியாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஃபிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரதின் கோஷ் மற்றும் சபினா யாஸ்மின் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ரிதாப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும், அக்ருஸ்ஸமான் அன்சாரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ரிதாப்ரதா பானர்ஜி, ``கட்சியின் விதிமுறைகளின்படி, தேசிய செயற்குழுவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்க வேண்டும். கடைசியாக அத்தகைய குழு பிப்ரவரி 2022-ல் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் முடிந்த பிறகு அது புதுப்பிக்கப்படவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சிறப்பு அமர்வு, அரூப் ராயை ஒருமனதாகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இந்த நடவடிக்கைகள் கட்சியின் அரசியலமைப்பு விதிகளின்படியே மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்படும். நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ். விதிகளின்படியே நாங்கள் செயல்பட்டு இந்தச் சிறப்பு அமர்வைக் கூட்டியுள்ளோம்.
எது சரி அல்லது தவறு என்பதைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. விரைவில் மாவட்டக் குழுக்கள், மாநிலப் பிரிவு மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் குழு ஆகியவற்றை நாங்கள் அமைப்போம். கட்சியின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரை நியமிக்கவிருக்கிறோம். மம்தா பானர்ஜி தலைமை ஆலோசகராக இருக்க விரும்பினால், அவரை மனதார வரவேற்கிறோம். " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சியின் சின்னம் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ திரிணாமுல் தலைமை, அதிருப்திக் குழுவுடன் தொடர்புடைய பல தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியது. வேண்டுமென்றே கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஃபிர்காத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ஆரூப் ராய், ஜாவேத் கான், ரதின் கோஷ், பிப்லப் மித்ரா, ஸ்னேஹாசிஸ் சக்ரவர்த்தி, சபினா யாஸ்மின் மற்றும் பிறருக்குக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் கோரும் நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது.











