செய்திகள் :

யானை - மனித எதிர்கொள்ளல்: 5 நாள்களில் பறிபோன 3 உயிர்கள் - நீலகிரியில் தொடரும் சோகம்!

post image

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளின் காரணமாக யானைகளின் வலசைப்பாதைகள் அனைத்தும் துண்டாடப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் என அடிப்படை தேவைகளுக்காக இடம்பெயர முடியாமல் யானைகள் திணறி வருகின்றன. அதேவேளையில், மனித உயிர்களும் தொடர்ந்து பறிபோகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் 3 நபர்கள் யானை எதிர்கொள்ளல்களால் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யானை தாக்கி உயிரிழப்பு

தொடரும் துயரம் குறித்து பகிர்ந்த உள்ளுர் மக்கள், " கோத்தகிரி அருகில் உள்ள தாளமொக்கை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரகு (28) என்ற பழங்குடி இளைஞர் நேற்று முன்தினம் கோயிலுக்குச் சென்று விட்டு இரவு 2 மணியளவில் வீடு திரும்பும் போது, யானை தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, சித்தப்பாஜி கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி ராஜப்பன்(40) என்பவரை நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் யானை தாக்கியதில் உயிரிழந்தார். கடந்த 8 - ம்‌ தேதி கூடலூரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். எங்கோ யாரோ செய்யும் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் உயிரிழக்க வேண்டியுள்ளது " என்றனர்.