கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாம...
`ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி!
2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலாஜி மாறிய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க வேட்பாளராக தங்கப்பாண்டியன் போட்டியிட்டார். தங்கப்பாண்டியன் 74,158 வாக்குகளும், ராஜேந்திர பாலாஜி 70,260 வாக்குகளும் பெற்றனர். இதில், ராஜேந்திர பாலாஜி, 3,078 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். அவர் சார்ந்த விஸ்வகர்மா சமூக வாக்குகளை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திருப்பினார். ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார்.
இதற்காக தி.மு.கவும் மறைமுகமாக அவருக்கு ஆதரவாக நின்றது. சிவகாசி தொகுதி மக்களின் அதிருப்தியும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இதனையெல்லாம் அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தனக்கு இரண்டு முறை அமைச்சர் பதவியை கொடுத்த சிவகாசி தொகுதியை கைவிட்டு, ராஜபாளையத்திற்கு தாவினார்.
ஜோதிட நம்பிக்கையுள்ள ராஜேந்திர பாலாஜியிடம், ”ராஜாவாக முடிசூட வேண்டுமென்றால் ராஜபாளையத்திற்கு மாறுங்கள்” என அவரது ஆஷ்டான ஜோதிடர் கூறியதாகச் சொல்லப்பட்டது.

அந்த நேரத்தில் ராஜேந்திர பாலாஜி மஞ்சள் உடையில் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். அவர் மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களும் மஞ்சள் உடையிலேயே அவரைச் சுற்றி வலம் வந்தனர். ஆனால், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியால் வெல்ல முடியவில்லை. ஆனாலும், ராஜபாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருந்ததோடு, நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு முன்னாள் எம்.பி.,ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.
இதனால், தனக்கு எதிராகச் செயல்படும் சக்தியாக யாரும் இல்லை என நினைத்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் சிவகாசி தொகுதிக்கு திரும்புவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டாக சிவகாசி தொகுதியில் பழையபடி விளையாட்டு போட்டிகளை நடத்துவது, நலத்திட்ட உதவிகள் செய்வது என்று பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் சிவகாசி தொகுதி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் இருப்பதால், மீண்டும் சிவகாசி தொகுதியில் வெல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகை கெளதமி, பா.ஜ.கவில் பயணித்தபோதே, கடந்த 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியைக் குறிவைத்து வேலை பார்த்தார். கடைசி நேரத்தில், ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்தில் களமிறங்க, கௌதமிக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு பறிபோனது. தற்போது அ.தி.மு.கவில் இணைந்திருக்கும் கௌதமி, வரும் தேர்தலிலும் ராஜபாளையத்தைக் கேட்கிறாராம். ஆனால், அந்தத் தொகுதியை பா.ஜ.கவுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறாராம் ராஜேந்திர பாலாஜி.!












