ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள்...
``லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" - அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை 'எலிகள் தின்றுவிட்டன' என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும் வியப்பும் தெரிவித்தது.
பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு விசித்திரமான தகவல் இடம் பெற்றிருந்தது. அதில், ``லஞ்சமாகக் கைப்பற்றப்பட்ட பணத்தை நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் இருந்த 'எலிகள் தின்றுவிட்டன'. அதனால் பணக்கற்றைகளை நீதிமன்றத்தில் சாட்சியமாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. பணம் நேரடியாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அறை பதிவேட்டில் பணம் வைப்பிலிடப்பட்டதற்கான குறிப்பு இருப்பதே குற்றத்தை உறுதி செய்யப் போதுமானது என்று கூறி உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது." என அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அருணா குமாரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``கைப்பற்றப்பட்ட பணக்கற்றைகள் எலிகளால் அழிக்கப்பட்டுவிட்டன என்ற தகவலை அறிந்து நாங்கள் பெரும் வியப்படைந்தோம். இது மாநில அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டுமல்ல, பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

எலிகள் பணத்தைத் தின்றன என்ற விளக்கம் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை." எனக் கூறி ஆதாரங்கள் அழிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அருணா குமாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தனர். அத்துடன் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆதாரமாக இருந்த பணமே மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














