முதுமைக்கு எண்ட் கார்டு: மரணத்தை வெல்லும் `ஜோம்பி செல்' ஆராய்ச்சி!
விசிக மா.செ அவமதிப்பு? பிரபல ரௌடியுடன் தேர்தல் வேலை! - அடுத்தடுத்த சர்ச்சைகளில் துரைமுருகன்
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடிக்குத் திரும்பிய முதல் நாளே நிபந்தனைகளை பின்பற்றாமல், தேர்தல் விதிகளை மீறி பேரணி சென்றதாக துரைமுருகன், அவரின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் உட்பட 8 பேர் மீது காட்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுமட்டுமல்லாமல், பேரணியின்போது துரைமுருகன் நின்றுகொண்டு பயணித்த காரில் வி.சி.க மாவட்டச் செயலாளர் பிலிப் ஏறினார். அப்போது, துரைமுருகன் தனது முகத்தை ஒருமாதிரியாக வைத்துக்கொண்டு கையை அசைத்து பிலிப்பை இறங்கச் சொன்னார்.
பிலிப்பும் இறங்கி தள்ளி நின்றுகொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

`துரைமுருகன் சமூகரீதியாகத்தான் பிலிப்பை தள்ளி நிற்கச் சொல்லி அவமானப்படுத்தினார். துரைமுருகனின் முகபாவனையை உற்றுக்கவனித்தால், வி.சி.க மீதான அவரின் பார்வையை உணரமுடியும். மாவட்டச் செயலாளர் பிலிப் மனவேதனைக்குள்ளாகி யிருக்கிறார். காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்காக வி.சி.க-வினர் வேலை செய்ய மாட்டோம். கடந்த தேர்தல் காலங்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாகன ஏற்பாடு செய்து கொடுத்து பிரசாரத்துக்கு உடன் அழைத்து செல்வார் துரைமுருகன்.
அப்போது, வி.சி.க நிர்வாகிகளுக்கு மட்டும் வாகனம் கொடுக்க மாட்டார். சொந்த வாகனத்தை எடுத்துசென்றாலும், பெட்ரோல், டீசலுக்கும் காசு கொடுக்க மாட்டார். இப்போது, வி.சி.க மாவட்டச் செயலாளரையே பொதுவெளியில் அவமானப்படுத்திவிட்டார்’ என்று கொதிக்கின்றனர் உள்ளூர் வி.சி.க நிர்வாகிகள்.
இதைத்தொடர்ந்து, பொன்னை அடுத்த ஒட்டனேரி கோயிலில் நேற்று வழிபட்டு, பிரசாரத்தைத் தொடங்கினார் துரைமுருகன். அப்போது, சாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு அர்ச்சகர் திருநீறு தட்டுடன் துரைமுருகன் அருகில் வந்து திருநீறு எடுத்து நெற்றியில் வைத்துவிட்டார். அதுவரைக் கைகூப்பி சாமியிடம் பவ்வியமாக வேண்டிக்கொண்டு நின்றிருந்த துரைமுருகன், அடுத்த நொடியே கர்சிப் எடுத்து திருநீறை அழித்துவிட்டார். இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. `இந்து விரோதி’ என்று பா.ஜ.க-வினரும் துரைமுருகனுக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இதனிடையே, காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜானி என்பவரையும் தி.மு.க-வில் இணைத்து, தனது தந்தையின் தேர்தல் வேலைகளுக்காக அழைத்திருக்கிறார் கதிர் ஆனந்த். ஜானி மீது கொலை, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பு என சுமார் 63 குற்ற வழக்குகள் இருக்கின்றன. சமீபத்தில்தான் சிறையில் இருந்தும் ஜாமீனில் வெளியே வந்தார் ஜானி. இப்பேர்ப்பட்ட குற்றப்பின்னணிகொண்ட நபரின் காரிலும் தி.மு.க கொடியை பொருத்தி கைகுலுக்கியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான கதிர் ஆனந்த். இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
















