TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
”விஜய்யின் டெல்டா முகம் 30 வருட சமூகப் பணி”- DMK கோட்டையான தஞ்சாவூரில் வாகை சூடிய விஜய் சரவணன்
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் சண்.இராமநாதன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம், நா.த.க-வில் புலவர் கிருஷ்ணகுமார், த.வெ.க-வில் விஜய் சரவணன் போட்டியிட்டனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் விஜய் சரவணன் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்பார்கள். இங்கு அதிகமான முறையில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது இரண்டாவது தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவற்றை மேற்கோள் காட்டி தஞ்சாவூரை திமுக-வினர் தங்கள் கோட்டை என பெருமையுடன் சொல்லி வந்தனர்.
இந்நிலையில் எளிய பின்னணியைக் கொண்ட விஜய் சரவணன், திமுக வேட்பாளர் சண்.இராமநாதனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். பத்தாவது சுற்று எண்ணிக்கை வந்ததும் விஜய்சரவணன் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை வகிக்க, அப்செட் ஆன சண்.இராமநாதன் யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். யாரையும் ஒதுக்கியதில்லை. பலருக்கு உதவி செய்திருக்கிறேன். நலிவடைந்த நிலையில் இருக்கும் கட்சியினருக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரை வாங்கிக்கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனால் இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என வாடிய முகத்துடன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.
நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக தன் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சரவணன். ஆரம்ப காலத்திலேயே விஜய் தலைமையில் இலவச திருமணங்களை நடத்தியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து சமூகப் பணிகளை செய்து வந்தவர் தவெக-வில் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். விஜயின் நம்பிக்கையைப் பெற்றவர்களில் ஒருவராக இருந்து பேச்சாற்றல் மூலம் அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஏழு வருடங்களாக இவர் நடத்தி வரும் விலையில்லா விருந்தகம் விஜய் சரவணனுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது.

பண பலம், அதிகார பலம் படைத்த இருகட்சி வேட்பாளர்களை எதிர்த்து விஜய் என்கிற அடையாளத்தை தாங்கி தேர்தலை சந்தித்த விஜய் சரவணன் வெற்றி பெற்று திமுக-வின் கோட்டையைத் தகர்த்திருக்கிறார். மேயராக இருந்த சண்.இராமநாதன் மீது பல்வேறு விமர்சனங்கள் நிலவிய நிலையில் திமுக தலைமை அவருக்கு சீட் வழங்கியது. ஸ்டாலின் உறவினர் என்பதால் வாய்ப்பு வழங்கப்பட்டதாக திமுக-வினரே விமர்சனம் செய்தனர். சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகத்திற்கு சீட் வழங்காததும் அவரின் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
குறிப்பாக சண்.இராமநாதன் போட்டியிட்டது சமூக ரீதியான பேசு பொருளாகவும் அமைந்தது. இவருக்கு எதிரான திமுக கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் உள்ளடி வேலை செய்து விட்டனர். இவையெல்லாம் சண்.இராமநாதனுக்கு மைனஸாக அமைந்தது. தவெக தலைவர் விஜய் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் தஞ்சையில் அதிகரித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக-வில் களமிறங்கிய கருப்பு முருகானந்தத்திற்கும் பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்த மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை. இப்படியான சூழலில் எல்லோருடைய சாய்ஸாகவும் மாறிய விஜய் சரவணன் 16,830 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து விஜய் சரவணனிடம் பேசினோம், "எங்கள் தளபதி விஜய் முகமாக இருந்து 30 வருடமாக சமூக பணிகளைச் செய்து வந்தேன். தமிழக மக்கள் விஜய் பக்கம் நின்றார்கள். திமுக மக்கள் விரோத அரசு என்பதை எதிர்க்கட்சி மக்களிடத்தில் முன் வைக்கவில்லை. ஆனால் எங்கள் தலைவர் விஜய், திமுகவின் முகத்திரையைக் கிழித்தார். விஜய்மீது வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கை போன்றவற்றால் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். இதற்காக தவெக-வினரும் ஒருங்கிணைந்து உழைத்தனர். இவை அனைத்தும் விஜய் என்ற எங்கள் தலைவரால் சாத்தியமானது. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தஞ்சை மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொகுதியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் என் பணிகள் இருக்கும்" என்றார்.















