பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவ...
`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்
த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர், தெரிந்த முகம் என்று பல விஷயங்கள் இருந்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
அதேநேரம், முசிறி தொகுதியில் விக்னேஷ் வென்றிருக்கிறார். லால்குடி பகுதியைச் சேர்ந்த இவர், அ.ம.மு.க-வில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் லால்குடி தொகுதியைக் குறிவைத்து, த.வெ.க-வுக்கு தாவினார்.

ஆனால், முசிறியில் முதலில் நிற்க நினைத்த கு.ப.கிருஷ்ணன், கடைசியில் லால்குடியில் நிற்க முடிவெடுத்து, விக்னேஷை முசிறிக்குத் தள்ளிவிட்டார். வேண்டா வெறுப்பாகத் தேர்தலை எதிர்கொண்ட விக்னேஷ் வென்றிருக்கிறார். இதனால், 'தப்புக்கணக்கு போட்டுவிட்டோமே' என்று புலம்பும் கு.ப.கிருஷ்ணன், வாரியத்தைக் குறிவைத்துக் காய் நகர்த்துகிறாராம்.
த.வெ.க ஆட்சியமைக்கக் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 118 எண்ணிக்கையைத் தொட மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்பார்க்கிறார் த.வெ.க தலைவர் விஜய். அந்த வகையில், தலா 2 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைக் கோரியிருக்கிறார் விஜய்.
இந்தச் சூழலில், கடந்த மே 5-ம் தேதி அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் திருமா. அப்போது, த.வெ.க-விடமிருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதை திருமா சொல்லவும், 'நீண்ட நாட்கள் இணைந்து பயணித்திருக்கிறோம். நல்ல முடிவாக எடுங்கள்...' என்று வலியுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டாராம் திருமா. ஒருவேளை விஜய் ஆட்சியமைக்க திருமா ஆதரவு கொடுத்தால் வி.சி.க-வின் முக்கிய புள்ளிகளை தி.மு.க-வுக்கு இழுத்துவிடும் முடிவில் இருக்கிறதாம் தி.மு.க தலைமை.
கோவை தடாகம் சாலையிலுள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை தெற்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் செந்தில் பாலாஜி வெற்றி பெறவே, மையத்திலிருந்த த.வெ.க வேட்பாளர் செந்தில் குமாரிடம் கை குலுக்கியபடி பேசினார் செந்தில் பாலாஜி.
அப்போது 'சாரி, நான் வராமல் இருந்திருந்தால் நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள். என்னால் தான் நீங்கத் தோற்க வேண்டியதாகிவிட்டது..' என செந்தில் பாலாஜி ஆறுதல் கூறியிருக்கிறார். அதற்கு என்ன பதில் சொல்வது என சில விநாடிகள் யோசித்த செந்தில் குமார், 'பரவாயில்ல சார். இது உங்க லைஃப் பிரச்னை...' என்று சிரித்துவிட்டு கடந்துவிட்டாராம்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் துணைச்செயலாளர் அல்லது அதற்கு மேல் உயர் பதவி வகிப்பவர் சிறப்பு உதவியாளராகவும், செக்ஷன் ஆபீசர் பதவி வகிப்பவர் மூத்த உதவியாளராகவும், அதற்குக் கீழ் பதவி வகிப்பவர்கள் இளநிலை உதவியாளராகவும் நியமிக்கப்படுவது வழக்கம். ஒரு அமைச்சருக்கு தலா மூன்று உதவியாளர்களை அரசே நியமிக்கும். வழக்கமாக, தி.மு.க அல்லது அ.தி.மு.க அரசுகள் பதவியேற்கும்போது, அமைச்சர்களின் பழைய பி.ஏ-க்கள் முந்திச் சென்று விண்ணப்பம் தருவார்கள்.
இந்த முறை த.வெ.க புதிய கட்சி என்பதால், அனைத்து அமைச்சர்களுக்கும் மொத்தமாக புதிய உதவியாளர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும். அதற்குத் தலைமைச் செயலகத்தில் உள்ள 42 துறைகளிலும் விருப்பம் கேட்டபோது, சுமார் ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் குவிந்து விட்டனவாம். அதில், உள்துறையில் பணியாற்ற மட்டும் வந்த நூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் பாதி பேர் பெண்களாம்.












