China Vs Taiwan War: India பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | Silver | IP...
'விஜய் அறியாமல்கூட மதவாத சக்திகளுக்கு உதவிவிடக் கூடாது' - எச்சரிக்கும் துரை வைகோ!
ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக் கூடாது. சாதி, மத மோதல் ஏற்படக் கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க கூட்டணியில் இருந்து வருகிறோம். ம.தி.மு.க எத்தனை சீட்டுகளில் பேட்டியிட வேண்டும் என்பதை தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கையிலான சீட்டு எங்களுக்கு தி.மு.க வழங்கும். தி.மு.க கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என உறுதியாக உள்ளோம். வேறு எந்த கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக இருக்கும். கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்துவிட்டன. அதனை மேற்கொண்டும் வளரவிடக் கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் நாங்கள் இணைந்துள்ளோம். தேர்தலில் அவர்கள் பல வியூகங்கள் வகுத்து வருகிறார்கள். ஜனநாயக சக்திகள் இணைந்து மதவாத சக்திகளை அழித்து தேர்தலில் வெற்றி பெறுவோம். த.வெ.க தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். விஜய் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமல்கூட மதவாத சக்திகளுக்கு உதவிவிடக் கூடாது. த.வெ.க தலைவர் விஜய் பா.ஜ.க - அ.தி.மு.க. கூட்டணியில் இணையமாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்தி என்றும், அவர்கள் கொள்கை எதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் முத்திரை பதிப்போம் எனவும், ஆட்சி மாற்றம் வரும் எனவும் கூறி வருகிறார். இது பா.ஜ.க-வினரை உற்சாகப்படுத்தும் செயல் மட்டுமே. சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு முடிவில் 97 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கப்பட்டுள்ளனர். உ.பி-யில் கிட்டத்தட்ட 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்படி நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்துள்ளது. எஸ்.ஐ.ஆர் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய அந்த வேலையை இரண்டு மாதத்திற்குள் செய்து முடிக்கிறார்கள் என்றால் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

தகுதியான வாக்காளர்கள் இடம்பெற வேண்டும் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதும் தகுதி இல்லாதவர்கள் உள்ளே சேர்ப்பதும் தான் தற்போது பல மாநிலங்களில் நடந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும்போதும், தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு அதனை அறிமுகப்படுத்தும்போது தான் இதில் என்ன குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். இப்படி குறுக்கு வழியில் ஏதாவது ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் கூட உள்துறை அமைச்சருக்கு இருக்கலாம்" என்றார்.














