SpaceX: IPO விலையைவிடக் குறைந்தது... இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?
"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. போலி பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பதிவு சட்டத்தில் பிரிவு 34C என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் 23.01.2026 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நடைமுறையில் உள்ளது.
அதன்படி, பதிவுதுறை சட்டம் பதிவு விதியின் படி சொத்து பதிவுகளுக்கு அசல் ஆவணம் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் தொடர்பாக சார் பதிவாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டி இல்லாத காரணத்தால், அசல் ஆவணங்கள் இல்லாதபோது ஆவணப் பதிவுகளைச் செய்ய அவர்கள் தயக்கம் காட்டி மறுக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, போலி பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் 1908-ஆம் ஆண்டு பதிவு சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட, 34-சி பிரிவு தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில், “தமிழ்நாடு பதிவுச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 34-சி, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட விதி 55-ஏ-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.
சட்டமன்றம் நீதிசார்ந்த அதிகாரங்களை நிர்வாகத்துறையிடம் வழங்க முடியாது. இத்தகைய செயல்பாடு அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதோடு அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவையும் மீறுவதாகும்.
அரசியலமைப்பின் 300-ஏ பிரிவின் கீழ் ஒருவரின் சொத்துரிமைக்குத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாகச் சட்டத்திருத்தம் உள்ளது. இது, 'சொத்து மாற்றச் சட்டம்' மற்றும் 'ஒப்பந்தச் சட்டம்' போன்ற முக்கிய சட்டங்களின் விதிகளை மீறுவதுடன், அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் அதிகார வரம்பை மீறியது என அறிவிக்கிறோம். பதிவுச்சட்டத்தின் 34-சி பிரிவை சேர்த்து பிறப்பித்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிறோம்.

வில்லங்க சான்றிதழ் கோரும்போது சொத்தின் தற்போதைய அல்லது முந்தைய வில்லங்கங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும். வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் ஆகியவற்றையும் வழங்குமாறு பதிவுத் துறைத் தலைவருக்கு உத்தரவிடுகிறோம்.
இந்தப் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சர் -பதிவாளர் அலுவலகங்களிலும் உடனடியாகத் தொடங்கப்பட்டு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.





















