'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!
``20% கமிஷன் வேணும்… இல்லைன்னா பில் போடமாட்டேன்” - ரூ.1 லட்சம் லஞ்சம்; சிக்கிய வனச்சரக அலுவலர்!
தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக் கூறப்படும் சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன், ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (45), தனது பெயரில் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு யானை தடுப்பு அகழி (Elephant Proof Trench) அமைக்கும் பணிக்கான டெண்டரை அவர் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 07.02.2026 அன்று பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.

இந்த நிலையில், சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன், ஒப்பந்ததாரர் சுரேஷ்குமாரிடம் பில் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18.08.2026 அன்று சிவகிரிக்குச் சென்று வனச்சரக அலுவலரை சுரேஷ்குமார் நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் எடுத்திருப்பதால், பணியை முடிப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டதாகவும், அதற்கு கதிரவன் 20 சதவிகித கமிஷன் வழங்க வேண்டும்; இல்லையெனில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க மாட்டேன், பில் தொகையும் வழங்க மாட்டேன் எனக் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே ரூ.18.45 லட்சம் பில் தொகை பெற்றிருப்பதாகவும், அதற்கான 20 சதவிகித கமிஷனான ரூ.3.69 லட்சத்தை வழங்கிவிட்டு மீதமுள்ள பணியை முடிக்குமாறும் கதிரவன் கூறியதாகப் புகார் தெரிவிக்கிறது.
அவ்வளவு தொகையை உடனடியாக வழங்க முடியாது என சுரேஷ்குமார் கூறியபோது, முதல் தவணையாக ரூ.1 லட்சத்தை மறுநாள் வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை இறுதி பில் போடும்போது வழங்க வேண்டும் என்றும் கதிரவன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார், இது குறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கடந்த 18.08.2026 அன்று கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து, ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை சுரேஷ்குமாரிடம் வழங்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இன்று 19.08.2026 சுரேஷ்குமார் மூலம் அந்தப் பணம் கதிரவனிடம் வழங்கப்பட்டது.
சிவகிரியில் உள்ள அவரது வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், கதிரவனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தென்காசி மாவட்ட வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட வனச்சரக அலுவலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


















