``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி
`30% கமிஷன்... கடவுள் சொத்திலும் கொள்ளை!’ - புதுச்சேரி என்.டி.ஏ அரசை விளாசிய ராகுல் காந்தி
தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, ``புதுச்சேரிக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். அதனால் புதுச்சேரி வந்து உங்களைப் பார்க்க நான் ஆசைப்படுவேன். புதுச்சேரியை நான் நேசிப்பதற்கு காரணம் இந்த மண்ணின் இயற்கை வளம் மட்டுமல்ல, உங்களின் அன்பும், நட்பும்தான்.
ஆனால் இப்போது இங்கு வரும்போது என் மனதில் கவலைகள் நிழலாடுகின்றன. ஏன் என்றால் தற்போது இந்த மாநிலத்தை ஆட்சி செய்கின்றவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் எங்கேயோ இருந்து இந்த மாநிலத்தை ஆட்சி செய்கிறார்கள்.
மேலும் தற்போது இருக்கும் அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களையும், வேட்கைகளையும் உள்வாங்கிக் கொண்ட அரசு இல்லை. எங்கேயோ இருக்கின்ற சிலர், இந்த மக்களின் மீது திணிக்கின்றன கருத்துகளின் அடிப்படையில் நடக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.

பா.ஜ.க-வின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் இந்த மண்ணில் புகுத்த நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணத்தை உள்வாங்கி, அவர்களின் விருப்பத்தை உள்வாங்கி நடத்தும் ஆட்சியாக இந்த ஆட்சி இல்லை.
இந்த மாநிலத்தை துணைநிலை ஆளுநரை வைத்து ரிமோட் மூலம் பா.ஜ.க ஆட்டிப் படைக்கிறதே தவிர, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. இங்கே பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
அதேபோல உயிரோட்டமாக இருந்த தொழில்துறை சிறிது சிறிதாக நசிந்து இறந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. புதுச்சேரி அதானிக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. காரைக்கால் துறைமுகத்தை ஏற்கனவே அவருக்கு விற்றுவிட்டார்கள்.
இங்கிருக்கும் பா.ஜ.க அரசு தொடர்ந்தால் மின்சாரம் முதல் அரசின் அத்தனை வளங்களும் அதானி குடும்பத்திற்கு விற்கப்பட்டுவிடும் என்று நான் எச்சரிக்கிறேன். போலி மருந்து உற்பத்தியில் புதுச்சேரி முன்னிலையில் இருக்கிறது. இங்கு மிகப்பெரிய அளவில் போலி மருந்து தயாரிப்பு நடைபெறுகிறது.
ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு சார்பில் கொடுக்கப்படும் அனைத்து ஒப்பந்தப் பணிகளுக்கும் 30% கமிஷன் பெறுவது அனைவருக்கும் தெரியும். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அதுகுறித்துப் புகார்கள் கூறினாலும் ஆட்சியாளர்கள் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. இவர்கள் மக்களிடமிருந்து மட்டுமல்ல கடவுள்களிடம் இருந்தும் கொள்ளையடிக்கிறார்கள். கோயில்களுக்கு சொந்தமான இடங்களை கொள்ளையடித்து விற்றிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதால் இரவு நேரங்களில் பெண்களால் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. புதுச்சேரியில் வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 30,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அரசுப் பணிகளுக்கான வயதுவரம்பு 40 ஆக உயர்த்தப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பீடு. புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோய் வந்தாலும் அரசு 20 லட்சம் வழங்கி, உங்களுக்கான மருத்துவத்தை செய்யும். புதுச்சேரியை துணைநிலை ஆளுநர் மட்டும் ஆள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதுச்சேரியை புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன் வருகிறோம். காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அப்போதுதான் அடுத்த தலைமுறை இளைஞர்களால் அரசு நிர்வாகத்துக்குள் வர முடியும்" என்றார்.














