'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை
திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் செல்வபெருந்தகை.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முடிவை நோக்கி க்ளைமாக்ஸை எட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்று மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை கூறுமாறு காங்கிரஸூக்கு திமுக கெடு விதித்திருந்தது. திமுக காங்கிரஸூக்கு 27-28 சீட்கள் வரை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் டெல்லி தலைமை 39 சீட்கள் வரையும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காமலே உள்ளது.
திமுக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸின் உள்ளாகவே இரண்டுவிதமான கருத்துகள் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் திமுக உடன் கூட்டணி செல்லவே விரும்புகின்றனர். இந்நிலையில்தான், திமுக விதித்த கெடு நாளான இன்று காலை 11:40 மணியளவில் சிதம்பரத்தின் வீட்டில் செல்வப்பெருந்தகையும் அவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்க மதியம் 12:30 மணிக்கு அப்பாய்ண்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. 12:25 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் சித்தரஞ்சன் சாலைக்கு கிளம்பினர். 12:40 மணிக்கு முதல்வரின் வீட்டை அடைந்த இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக முதல்வருடன் ஆலோசித்து வருகின்றனர்.

செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்.















