காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு!...
BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 - 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது ஒரு ரகம் என்றால், கடைசி டெஸ்ட்டில் 549 டார்கெட் சேஸிங்கில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது இன்னொரு ரகம்.
இந்த ஒரு சீரிஸ் தோல்வியால் சொந்த மண்ணில் சுமார் மூன்று தசாப்தங்களாக இந்தியா கட்டிக்காத்து வந்த பல தனித்துவ சாதனைகள் எல்லாம் நொறுங்கிப் போய்விட்டன. அவை என்னென்ன என்பதை வரிசையாகப் பார்க்கலாம்.

25 வருடங்களுக்குப் பிறகு!
இந்திய அணி கடைசியாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் தோல்வி. அது நடந்து 25 வருடங்களுக்குப் பிறகு இன்று அதைவிட மிக மோசமாக 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றிருக்கிறது.
30 வருடங்களுக்குப் பிறகு!
சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் ஒருவர்கூட சதம் அடிக்காத நிகழ்வு இதற்கு முன்பு 2 முறை நிகழ்ந்திருக்கிறது.
முதல்முறையாக 1969-ல் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
அதன்பிறகு 26 வருடங்கள் கழித்து 1995-ல் அதே நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
தற்போது 30 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவரும் சதம் அடிக்கவில்லை.

41 வருடங்களுக்குப் பிறகு!
இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் 1983-ல் வெஸ்ட் இன்டீஸுக்கெதிராகவும், 1984-ல் இங்கிலாந்துக்கெதிராகவும் என சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்தது.
அதன்பிறகு 41 வருடங்களுக்குப் பின் 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், 2025-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் என சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்திருக்கிறது.

3-வது முறை!
இந்திய அணி தன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணியிடம் 2 - 0 என ஒயிட் வாஷ் ஆனது.
அதன்பிறகு 24 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் கடந்த ஆண்டு 3 - 0 ஒயிட் வாஷ் ஆனது.
தற்போது தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்தியா.


















