திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சிய...
DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர்.




அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர்.
6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!















