இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இற...
Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?
Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
காதுகளைக் குடைவதால், உள்ளே உள்ள சருமம் பாதிக்கப்படலாம். அப்படித்தான் உங்களுக்கு செவிப்பறையில் ஓட்டை விழுந்துள்ளது. இதை 'ட்ரமாட்டிக் பெர்ஃபோரேஷன்' (Traumatic Perforation) என்று சொல்வோம். அதாவது செவிப்பறையில் ஏற்பட்ட கிழிசல். இந்தப் பிரச்னையானது 99 சதவிகிதம், தானாகவே சரியாகிவிடக்கூடியது.
செவிப்பறையில் கிழிசல் ஏற்படும்போது, அங்கே ஒரு கட்டி போன்று உருவாகும். அந்தக் கட்டிதான், செவிப்பறையில் ஏற்பட்ட பாதிப்பு மெள்ள மெள்ள ஆறுவதற்கு உதவும். எனவே, இதில் தண்ணீர் படக்கூடாது. நீங்களாக சுய மருத்துவம் என்ற பெயரில் காதுகளுக்கான டிராப்ஸ் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. முதல் வேலையாக நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுப்பார். ஆன்டிபயாட்டிக் மருந்துகள், சளி பிடிக்காமலிருப்பதற்கான மருந்துகள், சில வைட்டமின்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்து நாள்களில், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.
செவிப்பறையானது முற்றிலுமாக ஆறிவிட்டதா என்பதை உறுதிசெய்யும்வரை இந்தச் சோதனை தேவைப்படும். ஏற்கெனவே சொன்னது போல, 99 சதவிகிதம் இது சரியாகிவிடும். ஒருவேளை அப்படிச் சரியாகாத பட்சத்தில், செவிப்பறையைப் பழுதுபார்க்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதின் பகுதியை வெட்ட வேண்டிய அவசியமின்றி, எண்டோஸ்கோப்பி முறையிலேயே இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். அரிதாக சிலருக்கு காதின் பின்பக்கத்தில் வெட்டி, இந்தப் பழுதுபார்க்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. ஒருவேளை அதில் சிரமங்களை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆடியோகிராம் பரிசோதனையும் செய்து, கேட்கும் திறனில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவர் செக் செய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















