ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா; அமெரிக்காவின் 100% வரி பாயுமா? ட்ரம்ப் ஒப்ப...
Doctor Vikatan: தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவுவது உண்மையிலேயே பலன் தருமா?
Doctor Vikatan: வயிற்று வலி, உடல் சூடு எனப் பல காரணங்களுக்கும் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவச் சொல்கிறார்களே.... அதன் காரணம் என்ன? அது உண்மையிலேயே வேலை செய்யுமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
பொதுவாக விளக்கெண்ணெய்க்கு உடலைக் குளிர்விக்கும் தன்மை அதிகம். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உடலில் தேய்க்கும்போது உடல் குளிர்ச்சியடையும் என்பது பாரம்பர்யமான தத்துவமாகும்.
தொப்புள் பகுதியில் எண்ணெய் தடவுவது மட்டுமல்லாமல் உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், மூட்டுப் பகுதிகள், கைகளின் உட்பகுதி, அக்குள் போன்ற இடங்களில் எண்ணெயைத் தேய்க்கும்போது உடல் குளிர்ச்சியடையும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இது நாம் பாரம்பர்யமாகப் பின்பற்றி வரும் ஒரு முறைதான்.
முந்தைய காலத்தில், அதாவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் வருவதற்கு முன்பு மான் கொம்பை இழைத்துத் தொப்புள் பகுதியில் தடவும் வழக்கம் இருந்தது. இப்போது அது சாத்தியமில்லை என்றாலும், அதற்கும் உடலைக் குளிர்விக்கும் ஆற்றல் உண்டு.
அதேபோல் 'சங்கு பற்பம்' எனும் சித்த மருந்தை பன்னீரிலோ அல்லது நீரிலோ இழைத்துத் தொப்புளில் தடவுவார்கள். இதன் பின்னணியில் வர்மப் புள்ளிகளைத் தூண்டும் நோக்கமும் இருந்திருக்கலாம். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சி கிடைப்பதுடன், வயிற்றுவலியும் குறைய வாய்ப்புள்ளது.

நவீன அறிவியல் ஆய்வுகளின்படி, விளக்கெண்ணெய்க்கு வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் பண்பு (Anti-inflammatory action) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் மூட்டு வலிக்கும் இதனைப் பயன்படுத்தி வருகிறோம். அடிப்படை உண்மை என்னவென்றால், உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணெய்களைத் தடவும்போது உடல் குளிர்ச்சியடையும் என்பதாகும்.
முழு உடலிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஒரு முறை என்றால் உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள் ஆகிய பகுதிகளில் மட்டும் எண்ணெய் வைத்து உடலைக் குளிர்விப்பது மற்றொரு முறையாகும்.
உடல் சூடு அல்லது பித்தம் காரணமாக வரும் வயிற்றுவலிக்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் (செப்டம்பர் மாதத்தில் காணப்படும் கடும் வெயில் அல்லது எல்நினோ விளைவுகளால் ஏற்படும் சூட்டினால்) உண்டாகும் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உஷ்ணத்திற்கும் தொப்புளில் எண்ணெய் வைக்கும் இந்தப் பாரம்பர்ய முறை நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
டாக்டர் விக்ரம் குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகு
















