தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்க...
Doctor Vikatan: Weight Loss முயற்சி... சம்மரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
Doctor Vikatan: மற்ற நாள்களைவிடவும், சம்மரில் வெயிட்லாஸ் செய்வது சுலபம் என்று எங்கேயோ படித்தேன். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர், கோடைக்காலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகள் குறித்துச் சொல்லுங்கள்...
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

சம்மரில் மட்டுமல்ல, எப்போதுமே உடலின் நீர்வறட்சி குறையாமல் பார்த்துக்கொள்வது என்பது எடைக்குறைப்புக்கு உதவும் எளிய டெக்னிக் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
சம்மரில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி மிகவும் சகஜம். உடலின் நீர் வறட்சி சரிசெய்யப்படாவிட்டால் அது எடைக்குறைப்பு முயற்சிக்குத் தடையாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
நீர்வறட்சியானது உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளைப் பாதிக்கும். கொழுப்பு எரிக்கப்படுவதைத் தாமதப்படுத்தி அதன் விளைவாக எடையை அதிகரிக்கச் செய்யும். நீர்வறட்சி ஏற்படாமல் அவ்வப்போது நீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதன் மூலம் எடை அதிகரிப்பைத் தடுக்க முடிவதுடன், பசி உணர்வையும் கட்டுப்படுத்த முடியும்.
சம்மரில் நீங்கள் உட்கொள்கிற உணவுகளும் எடைக்குறைப்புக்கு உதவக்கூடும். மெலன் குடும்பத்தைச் சேர்ந்த தர்பூசணி மற்றும் கிர்ணி ஆகிய இரண்டு பழங்களுமே நீர்ச்சத்து நிறைந்தவை. இவற்றில் கலோரிகளும் சர்க்கரையும் குறைவு. இரண்டுமே நிறைய ஊட்டங்கள் கொண்டவை.
இவற்றில் வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம். உடற்பயிற்சிசெய்யும்போது ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் இறுக்கத்தைச் சரிசெய்யும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. அதனாலேயே உடற்பயிற்சிக்குப் பிறகு இதை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவதுண்டு. இந்தச் சீசனில் அதிகம் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழத்தை அறவே தவிர்த்து விடுங்கள்.
பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் என அனைத்துவகையான தாதுச்சத்துகளையும் கொண்டது இளநீர். இவை உடலின் நீர்ச்சத்தையும் எலக்ட்ரோலைட் பேலன்ஸையும் காக்கக்கூடியவை.
இளநீரில் கலோரிகள் குறைவு, தவிர வேறெந்த ஸ்போர்ட்ஸ் பானங்களையும்விட சிறந்தது. உடற்பயிற்சிகளுக்குப் பிறகு அருந்தக்கூடிய ஆகச்சிறந்த பானம் என்றால் அது இளநீர் மட்டுமே

எளிதாக, எல்லோராலும் எப்போதும் தயாரித்து அருந்தக்கூடிய பானம் எலுமிச்சை ஜூஸ். இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். உணவருந்திய பிறகு எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் இரும்புச்சத்து உட்கிரகிப்பு மேம்படும்.
இந்தச் சீசனில் கிடைக்கும் நுங்கை, கோடையின் கொடை என்றே சொல்லலாம். இதில் நிறைய நீர்ச்சத்தும், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுச்சத்துகளும் அபரிமிதமாக உள்ளன.
கோடையில் தினமும் நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடலின் நீர்த்தேவை பூர்த்தியாவதோடு, பசி உணர்வும் கட்டுப்படும். உடலின் திரவ -எலெக்ட்ரோலைட் விகிதமும் சரியாக நிர்வகிக்கப்படும்.
நூல்கோல், சவ்சவ், முள்ளங்கி மற்றும் சுரைக்காய் ஆகிய இந்த நான்கு காய்கறிகளுமே குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்தும் கொண்டவை என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இவை மிகச்சிறந்த தேர்வாகும். இதில் நூல்கோலில் உள்ள வைட்டமின் சி, இதயநோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதுடன், அதிலுள்ள பொட்டாசியம் செரிமானத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. சவ்சவ் மற்றும் முள்ளங்கி ஆகிய காய்கள் நீர்ச்சத்து நிறைந்தவை.
குறிப்பாக, சவ்சவ்வில் உள்ள ஃபோலேட் சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. முள்ளங்கி, நீர் வறட்சியைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இறுதியாக, 95% நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், கோடைக்கால நீரிழப்பை ஈடுசெய்வதுடன் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இவை அனைத்தையும் கூட்டு, சாம்பார் அல்லது பொரியலாக அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















