`எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுட்டு பிரசாரத்துக்கு காசு கேட்டா தப்பு!' - கத்தார் தொழிலத...
Doctor Vikatan: கோயில் குளங்கள், ஆறுகளில் குளித்தால் அரிப்பு, தவிர்க்க முடியாதபோது என்ன செய்வது?
Doctor Vikatan: வீட்டைத் தவிர வெளியிடங்களில் குளித்தால்... குறிப்பாக குளங்கள், ஆறுகளில் குளித்தால் ரொம்பவும் உடல் அரிக்கிறது. புண்ணியத்தலங்கள் என்பதால் அந்த நீரில் குளிக்காமலும் இருக்க முடியவில்லை. அடிக்கடி கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், இந்தப் பிரச்னை வராமலிருக்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பொதுவாக மக்கள் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது இப்படிப்பட்ட பிரச்னை வருவதாகச் சொல்லி, தீர்வு கேட்பார்கள், ஆனால், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது பற்றிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. பலரும் அலட்சியம் செய்கிற விஷயம் இது.
நீங்கள் கேட்டுள்ளபடி வெளியூர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்வற்றில் உள்ள தண்ணீரின் pH அளவானது இடத்துக்கேற்ப மாறுபடும். புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான்.
அதிலும் பிரபலமான கோயில் குளங்கள், புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் போன்ற கழிவுகள் நீரில் கலந்திருக்கும் சூழல் உள்ளது. புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித நீராடாமலும் இருக்க முடியாது, அலர்ஜியும் வரக்கூடாது என்றால், சருமத்தைப் பாதுகாக்க முன் எச்சரிக்கையாக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சரியானது.
சருமத்தைப் பாதுகாக்க, மாய்ஸ்ச்சரைசர் (moisturizer) தடவிக்கொண்டு பிறகு குளிக்கப் போகலாம். மாய்ஸ்ச்சரைசர், ஒரு கவசம்போலச் செயல்படும். குளித்து முடித்த உடனேயே உடலை நன்றாகத் துடைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒருவேளை நீர்நிலைகளில் நீங்கள் முழுமையாகவெல்லாம் குளிக்கவில்லை, வெறுமனே முங்கி எழுந்து வந்துவிட்டீர்கள் என்றால், உங்கள் இடத்துக்குத் திரும்பியதும் சுத்தமான நீரில் முழுமையாகக் குளித்து விடுங்கள். பிறகு மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். சருமத்தைப் போலவே தலைமுடிக்கும் கண்டிஷனர் (conditioner) பயன்படுத்துவது கூந்தலுக்கான பாதுகாப்பு கவசமாகச் செயல்படும். அதாவது முடியின் கியூட்டிக்கிள் (cuticle) பகுதியைப் பாதுகாக்கும். நீச்சல் குளங்களில் குளிப்பவர்களுக்கும் இதே நடைமுறைகள் பொருந்தும்.
இத்தனை விஷயங்களைச் செய்த பிறகும் சருமத்தில் அரிப்பு, தடிப்பு (rashes) அல்லது எக்ஸிமா (eczema) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சருமநல மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















