"நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்'னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!"- விக...
Elephant Day: வாழிடமும், வழித்தடமும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பேருயிர்களைக் காக்க முடியும்!
சம காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வரும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. சூழலியல் பாதுகாப்பில் அளப்பரிய பங்காற்றி வரும் யானை இனத்தைப் பாதுகாக்க உலக அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அவசிய தேவைகளுக்காகவே 'புராஜெக்ட் எலிபன்ட்' திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் யானைகள் பாதுகாப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வனவிலங்கு உயிரியல்துறை தலைவரும் உலகளாவிய ஆசிய யானைகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான முனைவர் ராமகிருஷ்ணன், ``உலக அளவில் 13 நாடுகளில் சுமார் 45 ஆயிரம் முதல் 47 ஆயிரம் ஆசிய யானைகள் உள்ளன. இவற்றில் பாதியளவு இந்தியாவில் தான் உள்ளன. முதுமலை, கூடலூர், நீலகிரி, கோவை, சத்தியமங்கலம், தர்மபுரி உள்ளிட்ட 16 வன கோட்டங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. 2023- ம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் 3,063 யானைகள் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. நீலகிரி உயிர்சூழல் மண்டலத்திற்கு உட்பட்ட நாகர்ஹோலே, வயநாடு, பந்திப்பூர், முதுமலை, அமைதி பள்ளத்தாக்கு, நீலகிரி, கோவை மற்றும் பவானிசாகர், பண்ணாரி பகுதிகளை உள்ளடக்கிய சத்தியமங்கம் பகுதிகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையில் வர கூடிய சாம்ராஜ் நகர், ஆசனூர், தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய சத்தியமங்கலத்தின் ஒருபகுதி, கொள்ளேகால், ஈரோடு, பன்னார்கட்டா தேசிய பூங்கா வரை உள்ள வனங்களில் தான் உலகிலேயே ஆசிய யானைகள் அடர்த்தியாக (அதிக எண்ணிக்கையில்) வாழக் கூடிய பகுதிகளாக உள்ளன.
இங்குள்ள யானைக்கூட்டங்கள் மரபியல் ரீதியாக ஆரோக்கியமானவையாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யானைகளின் அழிவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வழித்தடப் பிரச்னை, மின்சாரம் தாக்கி உயிரிழப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. யானை வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டாலும் வழித்தட மேலாண்மை, அந்நிய களை செடிகள் ஊடுருவலை தடுத்தல், மின்சார வேலி பயன்பாட்டை சீர்படுத்துதல், மனித - யானை முரண்பாடுகளை களைதல் போன்ற மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான யானை வழித்தடங்களான சீகூர் வழித்தடம், ஓவேலி வழித்தடம், கல்லாறு வழித்தடம் போன்றவற்றின் பாதுகாப்பு மிக அவசியமாகிறது. இந்த வழித்தடங்களை பயன்படுத்தித்தான் ஒவ்வொரு பருவ காலங்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்று வருவதால் வனம் வளமாகிறது. யானைகளும் இடையூறின்றி வாழ்கின்றன.

இதனால் வழித்தடங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். நடப்பு ஆண்டில் பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள சூப்பர் எல்-நினோ விளைவினால் மழை பெய்தல் மற்றும் வெப்பநிலை கடந்த காலங்களை போல சீராக இல்லாததால் வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே உணவு, தண்ணீர் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் இடப்பெயர்ச்சி செய்யக்கூடும். அதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பாதுகாப்புடன் இருந்து தங்களது பயிர்களையும், விலைமதிப்பில்லாத மனித உயிர்களையும் காத்து யானைகளுடன் இசைந்து வாழ்வது அவசியமானது" என்றார்.


















