‘சுத்தமான பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்?’ - E20 விவகாரத்தில் பாஜக எ...
ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா
ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெட்டி வீழ்த்தும் மரங்கள், நம் வருங்கால சந்ததியை ஒரு நச்சு உலகை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
இயற்கையின் இந்த மௌனக் குரலைக் கேட்டு, மாசற்ற ஒரு தமிழ்நாட்டைக் காண வேண்டும் என்ற லட்சியத்தோடு களமிறங்கியுள்ளார், விழுப்புரம் மாவட்டம், பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பச்சைத் தியாகி சசி ராஜா.
சசி ராஜா தன் பயணத்தை ஜூன் 9, 2017 அன்று தொடங்கினார். அன்றைய தினம், வெறிச்சோடிக் கிடந்த ஏரிக்கரையின் வறண்ட மண்ணில் இவர் நட்ட முதல் மரக்கன்றுதான், இன்று பல ஆயிரம் மரங்கள் அடங்கிய காட்டின் முதல் விதை.

மறைந்த பிரபல நடிகர் விவேக்கின் "நட்டு வளர்ப்போம், மரங்களை!" என்ற முழக்கமும், சுற்றுச்சூழல் மீதான காதலுமே சசி ராஜாவை இந்தத் தொண்டுக்கு முழுமையாக அர்ப்பணிக்கச் செய்தது.

சினிமாவில் விவேக் சொன்ன பசுமை வழியை, தன் நிஜ வாழ்க்கையின் மூச்சாக மாற்றிக் காட்டினார் சசி ராஜா. எந்தவிதமான அரசு உதவியோ அல்லது மற்றவர்களை எதிர்பார்த்தோ இல்லாமல், தனது சொந்த முயற்சியிலும் தளராத தன்னம்பிக்கையிலும் மட்டுமே இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தி வருகிறார்.
சசி ராஜா தனது ஏரிக்கரைப் பயணத்தில் பனைமரம், அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். குறிப்பாக, நம் தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரங்கள் அழிந்து வருவதைக் கண்டு உணர்ந்து, 10,000-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வளர்ப்பதற்கு அவர் அதிக முன்னுரிமை அளித்து வருகிறார்.
நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும், ஊரின் இயற்கை வளத்தைக் காப்பதிலும் பனைமரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் அவற்றுக்குத் தனி கவனம் செலுத்துகிறார்.

தற்போது 6,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெற்றிகரமாக வளர்த்து முடித்துள்ள இவரது இறுதி இலக்கு, எப்படியாவது 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை இந்த ஏரிக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளர்த்து முடிப்பதாகும்.
சசி ராஜாவின் இந்தத் தொடர் முயற்சியால், இன்று அந்த ஏரிக்கரை அழகான பறவைகள் சரணாலயமாகவே மாறிவிட்டது.

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல வகைப் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, இலங்கையிலிருந்து வரும் பறவைகள் ஏராளமாக வந்து தங்கிச் செல்வது இந்தப் பகுதியின் சிறப்பம்சமாகும். பறவைகளின் கீச்சொலியும் குளிர்ந்த காற்றும் நிறைந்த பகுதியாக அந்த ஏரிக்கரை இப்போது முழுமையாக உருமாறியுள்ளது.

யார் உதவியையும் எதிர்பார்க்காமல், தனது லட்சியத்தை மட்டுமே நோக்கித் தனி ஒருவனாக இந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், தன் ஊரையும் சுற்றுச்சூழலையும் பசுமையாக்குவதே தன் வாழ்நாள் கடன் என்று நம்பி, ஒரு லட்சம் மரங்கள் என்ற இலக்கை நோக்கி அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பயணித்து வருகிறார்.


















