``எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" - ...
IPL: ஆர்சிபி முதலிடம்; பஞ்சாப்பிற்கு சறுக்கல்! - ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எவை?
2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை இப்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.
எஞ்சிய அணிகளின் தற்போதைய ஃபார்ம், புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் டாப்-4 இடங்களைப் பிடிக்கப்போகும் அந்த 4 அணிகள் எவை என்பதைப் பார்ப்போம்.

ஆர்சிபி
லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெங்களூரு அணி அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் 18 புள்ளிகளுடன் (+1.065 நிகர ரன் ரேட்) ஏற்கெனவே தனது ப்ளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது.
இப்போதைக்கு அவர்களின் ஒரே குறிக்கோள் எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் தங்கி, குவாலிஃபையர்-1 ஆட்டத்திற்கான தகுதியைப் பெறுவது மட்டுமே. பெங்களூரு அணியின் இந்த சீசன் ஃபார்ம் மற்ற அணிகளுக்குப் பெரும் சிம்மசொப்பனமாக உள்ளது.
குஜராத் அணி
இரண்டாவது அணியாக, குஜராத் டைட்டன்ஸ் வலுவான நிலையில் நீடிக்கிறது. 13 போட்டிகளில் 8 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது.
அவர்களின் +0.400 என்ற நேர்மறையான நிகர ரன் ரேட் அவர்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் வென்றால் அவர்கள் எவ்வித சிக்கலுமின்றி அதிகாரபூர்வமாகத் தகுதி பெற்றுவிடுவார்கள். ஒருவேளை தோற்றால்கூட ரன் ரேட் அடிப்படையில் டாப்-4-க்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

ஹைதராபாத் அணி
மூன்றாவது பலமான அணியாகத் திகழ்வது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள இவர்களுக்கு இன்னும் 2 போட்டிகள் கைவசம் உள்ளன. இந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றால்கூட இவர்களின் ரன் ரேட் (+0.331) இவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். இரண்டு போட்டிகளிலும் வெல்லும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் டாப்-2 இடத்தைப் பிடிக்கவும் ஹைதராபாத் அணிக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா?
நான்காவது இடத்திற்கான பந்தயம்தான் தற்போதைய புள்ளிகள் பட்டியலின்படி த்ரில்லராக மாறியிருக்கிறது. 13 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் சமமாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே தான் இப்போது அசல் யுத்தமே நடக்கிறது.
இவ்விரு அணிகளுமே +0.027 என்ற அச்சு அசலான ஒரே நிகர ரன் ரேட்டைக் கொண்டுள்ளன. மீதமுள்ள 2 போட்டிகளில் இரண்டுமே வாழ்வா-சாவா ஆட்டங்கள் தான். இந்த இரு அணிகளும் பஞ்சாப்பிற்கு சவாலாக இருக்கின்றன.

தற்போதைய புள்ளிகள் நிலவரம் மற்றும் ஆட்டத் திறனின் அடிப்படையில் பார்க்கும் போது பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் முன்னிலை வகிக்கின்றன. நான்காவது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


















