கோவை: MRF Mogrip சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்; கொடிசியா மைதானத்தில் சீறிப் பாய்ந...
கோவிட்: 2.21 கோடி மரணங்கள்; அம்பலமான தரவு குளறுபடிகள்... WHO அறிக்கையின் பின்னணி!
கோவிட்-19 பெருந்தொற்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தந்த துயரங்களையும், நாம் இழந்த உயிர்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? உலக சுகாதார அமைப்பின் (WHO) 'உலக சுகாதார புள்ளிவிவரங்கள் 2026' அறிக்கை, அதிகாரபூர்வ கணக்கைவிட மூன்று மடங்கு அதிகமாக, அதாவது 2.21 கோடி உண்மையான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறி அந்த ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளது.

இந்தப் பெருந்தொற்று உலக மக்களின் சராசரி ஆயுட்காலத்தைக் குறைத்து வரலாற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியது. பல நாடுகள் மரண கணக்குகளைச் சரியாகப் பதிவு செய்யாத தரவு குளறுபடிகள் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் இங்கே....
மூன்று மடங்கு அதிகம்!
அதிகாரபூர்வமாக உலக நாடுகளில் பதிவு செய்யப்பட்ட கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 70 லட்சம் (7 மில்லியன்). ஆனால், உலக சுகாதார அமைப்பின் புதிய மதிப்பீட்டின்படி, 2020 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட உண்மையான மரணங்களின் எண்ணிக்கை 2.21 கோடி (22.1 மில்லியன்) என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, அதிகாரபூர்வ கணக்கைவிட இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

கூடுதல் மரணங்கள்....
சாதாரண காலகட்டத்தில் நிகழக்கூடிய மரணங்களைவிட, குறிப்பிட்ட பேரிடர் அல்லது பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கை 'கூடுதல் மரணங்கள்' எனக் குறிப்பிடப் படுகிறது. இதில் கோவிட் தொற்றால் நேரடியாக இறந்தவர்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு முடங்கியதால் உரிய சிகிச்சை கிடைக்காமல், மறைமுகமாக இறந்தவர்கள் என இரு தரப்பினரும் அடங்குவர்.
மரணங்களின் போக்கு
பெருந்தொற்று பரவிய காலங்களில் மரணங்களின் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டது. அதன்படி 2021-ல் உச்சம் தொட்டது. பெருந்தொற்றின் தீவிரம் மற்றும் டெல்டா (Delta) போன்ற உருமாறிய வைரஸ்களின் பரவலால் 2021-ம் ஆண்டில் மட்டும் 1.04 கோடி (10.4 மில்லியன்) கூடுதல் மரணங்கள் நிகழ்ந்தன. அந்தச் சமயத்தில் உலகளாவிய மருத்துவக் கட்டமைப்புகள் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தன. இதன் பிறகு கூடுதல் மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. 2022-ல் இது 49 லட்சமாகவும், 2023-ல் 33 லட்சமாகவும் குறைந்தது.

ஆரோக்கியத்தில் வரலாற்றுப் பின்னடைவு
கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்களின் ஆரோக்கியத்தில் ஒரு வரலாற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் சுகாதாரத் துறையில் அடைந்த முன்னேற்றங்களை இந்தப் பெருந்தொற்று வீணடித்துள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலத்தில், உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy) 1.8 ஆண்டுகள் குறைந்துள்ளது. பெருந்தொற்றின் காரணமாக உலக மக்கள், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழும் ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் குறைந்துள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்?
பெண்களை விட ஆண்களே இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021-ன் உச்சக்கட்ட பாதிப்பின் போது, பெண்களை விட ஆண்களின் மரண விகிதம் 50% அதிகமாக இருந்தது. வயதானவர்களுக்கே மரண ஆபத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக, 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் மரண விகிதம், இளைஞர்களை விட 10 மடங்கு அதிகமாக இருந்தது.

மறைமுகக் காரணங்களும் இதர பாதிப்புகளும்
கோவிட் வைரஸ் நேரடியாக ஏற்படுத்திய மரணங்கள் தவிர, மறைமுக காரணங்களாலும் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்தன. பெருந்தொற்றுக் காலத்தில் வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள், காசநோய் (TB), ஹெச்.ஐ.வி (HIV) மற்றும் இதர தொற்றா நோய்களுக்கான மருத்துவச் சேவைகள் உலகெங்கும் முடங்கின. இதனால் சிகிச்சையைத் தள்ளிப்போட்ட பலரும் உயிரிழக்க நேரிட்டது. இதே அறிக்கையில், 2021-ல் நிலவிய காற்று மாசுபாட்டால் 66 லட்சம் மரணங்களும், 2019-ல் போதிய குடிநீர் மற்றும் சுகாதாரக் குறைபாட்டால் 14 லட்சம் மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தரவு சேகரிப்பில் குளறுபடிகள்
உலக நாடுகள் மரண கணக்குகளைப் பதிவு செய்வதில் இருக்கும் பெரும் பலவீனத்தை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2023-ம் ஆண்டில் உலகளவில் நிகழ்ந்த (தோராயமாக) 6.1 கோடி மரணங்களில், மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு மட்டுமே முறையான இறப்புக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பிடம் வெறும் 18% நாடுகள் மட்டுமே ஒரு வருடத்திற்குள் தங்களது மரணத் தரவுகளை முறையாகச் சமர்ப்பிக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு நாடுகள் தங்களது நாட்டில் நிகழும் மரணங்களுக்கான காரணங்களை ஒருபோதும் உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிப்பதே இல்லை.

குறிப்பாக, 2022-க்குப் பிறகு பல நாடுகள் பரவலான கோவிட் பரிசோதனைகளை நிறுத்திவிட்டதால், உண்மையான மரணங்கள் அதிகாரபூர்வக் கணக்கில் வராமல் விடுபட்டுள்ளன.
முன்பே கணித்த WHO... மறுத்த இந்தியா!
2020-2021 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 47.4 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு முன்னரே ஒரு தனிப்பட்ட ஆய்வில் கணித்திருந்தது. எனினும், இந்திய அரசு இந்தத் தரவை அப்போது மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




















