அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனி...
DC vs RR: ஸ்டார்க் வீசிய 'ஒற்றை' ஓவர்... ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் கனவு எங்கோ!
தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.
முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் டெல்லிக்கு எதிரான இந்தத் தோல்வி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததாக மாறி இருக்கிறது.
எப்போதுமே சிறப்பாக ஆடும் வைபவ் சூர்யவன்சி 219 ஸ்ட்ரைக்ரேட்டில் சேர்த்த 46 ரன்கள், எப்போதாவது சிறப்பாக ஆடும் கேப்டன் ரியான் பராக் அடித்த அதிவேக அரைசதம், அணிக்கு ஆங்கரிங் ரோலை இத்தொடரில் செய்து கொண்டிருக்கும் த்ருவ் ஜுரேலின் அரைசதம் - இவை அனைத்தையுமே அர்த்தமில்லாதது போல் ஆக்கி விட்டது அக்ஸர் படேல் எடுத்த ஒரே ஒரு முடிவு.

இத்தொடர் முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் அக்ஸர் எடுத்த முடிவுகள் விவாதத்திற்கு உள்ளாகின. இப்போட்டியிலோ மிடில் ஓவரில் ஸ்டார்க்கிற்கு இடைச்சொருகலாக அக்ஸர் படேலால் தரப்பட்ட ஒரே ஒரு ஓவர் தான் சகலத்தையும் மாற்றியது....
நியூபாலில் ஸ்டார்க்கின் ஸ்பெல் சிறப்பானதாக இல்லை. விக்கெட் வீழ்த்தாதது மட்டுமல்ல இரு ஓவர்களிலேயே 28 ரன்களை வாரி வழங்கி இருந்தார். ஸ்டார்க் மட்டுமல்ல "எங்கிடி தவிர்த்து யார் வந்தாலும் அடிப்போம்!", என்ற மனப்பான்மையோடே பவர்பிளேயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணுகியிருந்தது. 12 என்ற ரன்ரேட்டையும் தாண்டி 75 ரன்களை பவர்பிளே ஓவர்கள் பார்த்து விட்டது.
சரி பவர்பிளேயோடு ரன்குவிப்பு முடிவுக்கு வரும் என நினைத்தால் அதுவும் நடக்கவில்லை, சூர்யவன்சி ஆட்டமிழந்த பிறகாவது அதற்கான முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றால் அதுவும் நடந்தேறவில்லை. மாறாக, ஜுரேல் மற்றும் பராக் கூட்டணி அதிரடி ஆட்டத்தை அப்படியே முன்னெடுத்துச் சென்றது. 41 பந்துகளில் 72 ரன்களை அனாயசமாக ராஜஸ்தான் ராயல்ஸ் குவித்தது இந்த இரட்டையினால் தான்.
14 ஓவர்களிலேயே 160 ரன்கள் அடிக்கப்பட, இலக்கு 230-ஐ தாண்டுமா அல்லது 250-ஐ எட்டிப் பிடிக்குமா என்பதுதான் அப்போதுவரை நீடித்த நிலைமை.

உச்சத்தை தொடப் போகும் போது சரியத் தொடங்கி தொடக்கப்புள்ளியில் வந்து நினறால் எப்படி இருக்கும்? அதுதான் 15-வது ஓவரில் ராஜஸ்தானுக்கும் நிகழ்ந்தது.
பழைய தமிழ் படங்களில் வருவது போல் ஒரே ஒரு பாட்டிலேயே பணக்காரர் ஆவதெல்லாம் நடக்குமோ இல்லையோ ஒரே ஒரு ஓவரில் போட்டியே மாறும். இது பொதுவாக டெத் ஓவர்களில் நடந்தேறுவதே வழக்கம். ஆனால் இப்போட்டியிலோ அது மிடில் ஓவரில் நடந்தது. எதிர்பக்கம் நின்றிருந்த ஜுரேல் பார்த்த மிக பயங்கரமான ஹாரர் திரைப்படங்களில் இது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்.
7 - 14 ஓவர்களில் பலமுறை அக்ஸர் பௌலர்களை மாற்றிப் பார்த்து விட்டார், தானே கூட பந்துவீசியும் பார்த்தார், ஆனால் விக்கெட் விழுந்தபாடில்லை, ரன்ரேட்டையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நிலையில் தான் ப்ரேக் த்ரூவை எதிர்நோக்கி 15-வது ஓவர் ஸ்டார்க்கிடம் தரப்பட்டது. ஒன்றல்ல ரெண்டல்ல மூன்று விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி எதிர்பார்த்த அந்த திருப்புமுனையை திரும்பத் திரும்ப தந்தார் ஸ்டார்க்.
பராக்கின் விக்கெட்டை ஸ்டார்க்கின் ஸ்லோ பால் காவு வாங்கியது. அதற்கு அடுத்த பந்திலேயே ஃபெரைராவுக்கு ஒரு ஷார்ட் பாலை பார்சல் செய்ய பெரிய ஷாட்டுக்கு அவரும் முயன்று லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஹாட்ரிக் பந்தினை ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இறக்கப்பட்ட புதுமுக வீரர் ரவி சிங் சந்தித்தார்.
யார்க்கருக்கு ஸ்டார்க் முயல, அது லோ டாஸாக மாறி ரவி சிங்கிற்கு பவுண்டரியை பரிசளித்தது. ஆனால் அதற்கடுத்த பந்தே ஸ்லோ பாலினை வீசி ரவி சிங்கை ஸ்டார்க் சிக்க வைத்தார். எல்பிடபிள்யூவில் அவரும் வெளியேற நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் டெல்லி கேப்பிடல்ஸின் பக்கம் போட்டியை மொத்தமாக மடை மாற்றி விட்டார்.
15 ஓவர்களில் 166 என்பது நல்ல ரன்ரேட் தான். ஆனால் ஐந்து விக்கெட்டுகள் என்பதுதான் ஆபத்தின் குறியீடு. ஜுரேல், சுபம் துபே, இம்பேக்ட் பிளேயராக உள்ளே கொண்டு வரப்பட்ட ஷானகா என யாராலும் சரிந்த ரன்ரேட்டை அதன்பின் தூக்கி நிறுத்த முடியவில்லை. இறுதி ஐந்து ஓவர்களில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதுதான் 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படுவதற்கும் காரணமானது. தோல்விக்கும் அடித்தளமிட்டது.
ஸ்டார்க் மட்டுமல்ல எங்கிடியின் பந்துவீச்சும் அற்புதமாக இருந்தது. ஸ்லோ பால்களால் பேட்ஸ்மேனை குழப்பத்திலேயே வைத்திருந்தார்.

சூர்யவன்சி மற்றும் சுபம் துபேயின் விக்கெட்டுகளை வீழ்த்திய மாதவ் திவாரியின் பந்துவீச்சும் அபாரம். இது அவரது மூன்றாவது ஐபிஎல் போட்டி மட்டுமே, நடப்பு சீசனில் இது அவரது இரண்டாவது போட்டிதான் என்றாலும் பிரதான வீரர் போல வெறும் 6.8 எக்கானமியோடே பந்துவீசி இரு விக்கெட்களையும் மாதவ் திவாரி வீழ்த்தியிருந்தார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக டெல்லி கேப்பில்ஸின் ஃபீல்டிங் போட்டி முழுவதும் மிகச் சிறப்பாக இருந்தது, குறிப்பாக இறுதி ஐந்து ஓவர்களில் ஃபீல்டர்களின் பங்களிப்புதான் விக்கெட்டுகள் விழவும், ரன்கள் கட்டுப்படுத்தப்படவும் உறுதுணையாக இருந்தது.
200+ ரன்களை எட்ட முடியாதது மட்டுமே ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமல்ல, ஓப்பனிங் பார்டனர்ஷிப்பை உடைக்கவே பத்து ஓவர்கள் தேவைப்பட்டது என்பதும், அதற்குள்ளாகவே அடிக்க வேண்டியதில் சரிபாதிக்கும் மேலாகவே டெல்லி கேப்பில்ஸ் அடித்து விட்டது என்பதும் தான்.
அடுத்த எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தி இருப்பினும் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கூடுதலாக முதல் பாதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நல்ல ரன்ரேட்டில் ரன்களை சேர்த்து வைத்திருந்ததும் சுதந்திரமாகவும் பதற்றமின்றியும் இரண்டாவது பாதியை அணுக அவர்களுக்கு உதவியது.

ராஜஸ்தானின் ஃபீல்டிங்கிலும் நிறைய தவறுகளைப் பார்க்க முடிந்தது. கேட்ச் டிராப் என்று பார்த்தால் கே.எல் ராகுலுடையது மட்டும்தான் என்றாலும், சில மிஸ்-ஃபீல்டுகளையும் ஓவர் த்ரோக்களையும் இறுதி ஓவர்களில் பார்க்க முடிந்தது.
டெல்லி கேப்பில்ஸ் தரப்பில் அபிஷேக் போரெல் மற்றும் கே.எல் ராகுலின் அரைசதங்கள் அதிமுக்கியமானவை தான் என்றாலும் இறுதியில் கேப்டன் அக்ஸர் படேல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய கேமியோதான் டெல்லி கேப்பிடல்ஸ் இலகுவாக இலக்கை எட்ட வழிசெய்தது.
டிஃபெண்டிங் சாம்பியனான ஆர்.சி.பி மட்டுமே முனைப்போடு ப்ளே ஆஃப்பிற்கு முன்னேறி உள்ள நிலையில் டாப் 8-ல் மீதமுள்ள அணிகளின் நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள டெல்லியின் இந்த வெற்றி உதவியிருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் டெல்லி இருக்கும் திசையை நோக்கி பெரிய நன்றியை காற்றில் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர்.!



















