Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி ம...
Ken-Betwa Link Project: பழங்குடியின மக்களின் நீண்ட போராட்டம் - வலுகட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை
மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 17 நாட்களாகத் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருந்த 'சிதா அந்தோலன்' (Chita Andolan) போராட்டம், தற்போது காவல்துறையினரின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் எல்லையில் பாயும் கென் (Ken) நதியின் உபரி நீரை, வறட்சியால் தவிக்கும் பெட்வா (Betwa) நதிக்குக் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் பெரும் நதிகள் இணைப்புத் திட்டமான "கென்-பெட்வா இணைப்புத் திட்டம்" (Ken-Betwa Link Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் ₹44,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த 'தௌதான் அணை' (Daudhan Dam) மற்றும் கால்வாய்ப் பணிகளுக்காக, இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் சுமார் 24 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பன்னா புலிகள் காப்பகத்தின் (Panna Tiger Reserve) பெரும் பகுதியும் இதனால் பாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள பழங்குடியின மக்கள், தங்களுக்கு நியாயமான மறுவாழ்வுத் திட்டமும் தகுந்த இழப்பீடும் வழங்கக் கோரி பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள்.
சிதை போராட்டம் (Chita Andolan):
2026 ஏப்ரல் மாதத்தில், இப்பகுதிப் பழங்குடியினப் பெண்கள் சத்தர்பூரின் பரானா ஆற்றுப் படுகையில் எரியும் விறகுச் சிதைகள் போல அமைக்கப்பட்ட மரக்கட்டைகளின் மீது படுத்து போராடினர். "எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து எங்களை அப்புறப்படுத்துவது, எங்களை உயிரோடு சிதையில் ஏற்றுவதற்குச் சமம்" என குமுறுகின்றனர். தங்களுக்குரிய இழப்பீடான ₹25 லட்சம் முழுமையாகக் கிடைக்காததால் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
ஜூலை 2026 இல், பரானா ஆற்றின் பாலத்தின் அடியில் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு போராடும் அளவுக்குத் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் .

மத்தியப் பிரதேச அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய இந்தப் போராளிகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதன் பிறகு, சத்தர்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், ஜூலை 19 அதிகாலையில் சம்பவ இடத்திற்குப் பெருமளவில் விரைந்தனர்.
ஆற்றுக்குள் சிதைப்படுக்கைகளில் அமர்ந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் போராட்டக்காரர்களைப் போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி, வாகனங்கள் மூலம் தற்காலிகமாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
















