ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிகல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது.
கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் கப்பல் மெல்ல மூழ்கியது. எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் முழுமையாக மூழ்குவதற்கு முன், கப்பல் கேப்டன் உள்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 643 கண்டெய்னர்களில் 73 கண்டெய்னர்கள் காலியானவை.
46 கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட், 13 கண்டெய்னர்களில் சல்ஃபர் கலந்த ஆயில்கள் இருந்துள்ளன. மற்ற கண்டெய்னர்களில் மரத்தடிகள், முந்திரிக் கொட்டைகள், பழங்கள், துணி, தேயிலை ஆகியவை இருந்துள்ளன.
சுமார் 100 கண்டெய்னர்கள் கப்பலில் இருந்து வெளியே மிதந்து வந்ததாகவும் அவற்றில் சுமார் 54 கண்டெய்னர்கள் கேரளாவின் ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கரை ஒதுங்கின. ஆபத்தை விளைவிக்கும் கால்சியம் கார்பைட் உள்ளிட்ட ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் உட்பட பல கண்டெய்னர்கள் கப்பலுடன் கடலில் மூழ்கின.
கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள மாநிலத்தின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கரை ஒதுங்கின. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் மரத்தடிகள், முந்திரிக் கொட்டைகள் உள்ளிட்டவை கரை ஒதுங்கின.

கப்பல் விபத்தை மாநிலச் சிறப்பு பேரிடராக கேரள அரசு அறிவித்தது. மேலும் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாயும் 6 கிலோ அரிசியும் வழங்கியது. மேலும், எம்.எஸ்.சி எல்சா -3 கப்பலுக்கு எதிராக கேரளா போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
சி.ஷாம்ஜி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஃபோர்ட் கொச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் எம்.எஸ்.சி எல்சா-3 கப்பல் உரிமையாளர் பெயர் முதலிலும், கப்பல் கேப்டன் பெயர் இரண்டாவதாகவும், மூன்றாவதாக கப்பல் ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர்.
எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள சரக்குகளும், வெடிபொருட்களும் கப்பலில் இருப்பது தெரிந்தும், மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய கப்பல் நிறுவனத்திடம் 9,531 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கேரள அரசு அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கோர்ட் உத்தரவுபடி எம்.எஸ்.சி கப்பல் கம்பெனிக்குச் சொந்தமான விழிஞ்சம் துறைமுகத்தில் நின்ற எம்.எஸ்.சி அகிடெட்டா -2 என்ற கப்பலை கேரள அரசு சிறைப்பிடித்தது. கப்பல் விபத்துக்கு நஷ்ட ஈடாக 133 கோடி ரூபாய் வழங்கலாம் எனக் கப்பல் கம்பெனி கோர்ட்டில் தெரிவித்திருந்தது.
அதை ஏற்காத கோர்ட் சிறைப்பிடித்த கப்பலை விடுவிக்கவேண்டுமானால் 1227.62 கோடி ரூபாய் கோர்ட்டில் செலுத்த வேண்டும் எனக் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
உத்தரவைத் தொடர்ந்து தற்போது கப்பல் கம்பெனி 1227.62 கோடி ரூபாயை கோர்ட்டில் செலுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுகத்தில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த எம்.எஸ்.சி அகிடெட்டா -2 கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கேரள மாநிலத்துக்குச் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.




















