'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
'தேர்தல்ல போட்டி போட விருப்பமில்லங்க!' - ட்விஸ்ட் கொடுக்கும் தவெகவின் 'ஒரே'கூட்டணி கட்சி?
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்கிற வாதம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தேர்தலில் போட்டியிடாமல் இருக்க அந்த கட்சித் தலைவர் முஸ்தபா சொல்லும் காரணம்தான் தவெகவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறது.
தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடந்த பிப்ரவரியில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தது. ஆனந்தையும் ஆதவ்வையும் சந்தித்து தங்களின் ஆதரவை முஸ்தபா தெரிவித்திருந்தார். தவெகவும் முஸ்தபாவை அரவணைத்துக் கொண்டது. எல்லா மேடையிலும் முஸ்தபாவுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. தங்களை நம்பி வந்த ஒரே கட்சி என்பதால் தவெகவின் தலைமையும் முஸ்தபாவை முக்கிய இடத்தில் வைத்திருந்தது.

தவெகவுக்காக பல டிவி விவாதங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு பேசும் வாய்ப்பையும் தலைமை அவருக்கு கொடுத்தது. பெரிய கட்சிகளிடம் கூட்டணி கட்சிகள் அதிக சீட்களை கேட்டு அரசியல் களத்தை தகிக்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்தபாவும் தவெக தலைமையிடம் அதிக சீட்டுகளை கேட்டு நெருக்கிக் கொண்டிருப்பார் என நினைத்தோம். கூட்டணியில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது என்பதால் முஸ்தபா கேட்கும் இடத்தை தவெக கொடுக்கும் என்றும் தோன்றியது. இதே எண்ணத்தோடு பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். 'அவரு உஷாரான ஆளுங்க. அவருக்கு எலெக்சன்ல போட்டி போடுற எண்ணமே இல்ல...' என அதிர்ச்சி கொடுக்கின்றனர் தவெகவினர்.
`என்னணே சொல்றீங்க' என மேற்படி விசாரிக்கையில், 'முஸ்தபா மிக தெளிவாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் தவெகவால் என்ன செய்ய முடியும்? ஆட்சியைப் பிடித்து விடமுடியுமா என்கிறார். அதிகபட்சம் 10-15% வாக்குகளை வாங்குவீர்கள். இதற்காக கூட்டணி சீட்டுகளை வாங்கிக் கொண்டு போய் நான் செலவு செய்து தோற்பேன் என்று தெரிந்தே தோற்பதா? அது முட்டாள்த்தனமாக இருக்கும்.
அதனால் என் கட்சி போட்டியிடவில்லை. யாருக்காவது சீட் வேண்டுமான்றால் சொல்லுங்கள் தலைமையிடம் பேசி நல்லபடியாக முடித்து தருகிறேன் என இளநீர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அவர் பேசுவதைப் பார்த்தால் பாசிட்டிவாக இருக்கும் எங்களுக்கு கூட கிலியாக இருக்கிறது' என வருந்துகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள்.

உடனடியாக முஸ்தபாவை தொடர்புகொண்டு விஷயத்தை கேட்டோம் நான்கைந்து விநாடிகள் யோசித்துவிட்டு, 'தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் பேசுவோம்' என்றார்.
'அலர்ட்' ஆறுமுகமாக இருக்கிறாரே!














