'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?
மூன்று கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.5 கோடி நகைகள் கொள்ளை! - கத்தி முனையில் சிக்கிய வியாபாரி
விழுப்புரம் வீராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி, அதை கம்மல், ஜிமிக்கி, செயின் போன்ற ஆபரணங்களாக செய்து கடைகளுக்கு விற்பது இவரது வழக்கம். சுமார் பத்து ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வரும் ராஜமாணிக்கம், அதற்காக தன்னுடைய வீட்டிலேயே தங்க நகை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் மூன்று கிலோ தங்கத்தில் ஆபரணங்களை செய்த ராஜமாணிக்கம், அவற்றை சென்னையில் இருக்கும் நகைக் கடைகளுக்கு விநியோகிக்க முடிவெடுத்தார். அதற்காக நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் தன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்ற ஒன்பது பேர் கொண்ட கும்பல், கோட்டைவி நாயகர் கோயிலுக்கு அருகில் வழிமறித்து நிறுத்தினார்கள்.
அதே வேகத்தில் கத்தியை கட்டிய அந்தக் கும்பல், ராஜமாணிக்கம் நகைகள் வைத்திருந்த பையை கேட்டது. முதலில் அவர் மறுக்கவே, கத்தியால் அவரது கழுத்தை குத்த முயற்சித்திருக்கிறது அந்தக் கும்பல். அதில் பயந்துபோன ராஜமாணிக்கம், தங்க நகைகள் வைத்திருந்த பையை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அதையடுத்த சில விநாடிகளில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

அதனடிப்படையில் உடனே அங்கு விரைந்த போலீஸார், ராஜமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கைப்பற்றியதுடன், எல்லைப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். அதேபோல குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஏ.எஸ்.பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர் தங்க நகை வியாபாரிகள்.




















