UPI-யில் இனி பணம் அனுப்பினால் கட்டணமா? - புதிய சட்டம் என்ன சொல்கிறது?
Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!
புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது.
கொடைக்கானல் அருகே இருக்கும் மதிகெட்டான் சோலைக்குள் இருக்கும் தங்க மரத்தைப் புகைப்படம் எடுக்கக் கிளம்புகிறார் வீரா.

அந்தக் காடு குறித்து ஊர்மக்களும், நண்பர்களும் பல எச்சரிக்கைகளை எடுத்துரைத்த பிறகும் துணிச்சலோடு அங்குச் செல்கிறார் வீரா.
காட்டிற்குள் சென்றவருக்கு என்ன ஆனது, அவர் தங்க மரத்தைப் புகைப்படம் எடுத்தாரா என்பதைப் பல வகையான ஜானர்களில் கலந்துகட்டிச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரஃப்.
ஓசிடி பாதிப்பு உடையவராக வரும் கதாநாயகன் பதற்றத்தை வெளிப்படுத்தும் இடங்களில் 'கிளிக்ஸ்' வாங்குகிறார். ஆனால், எமோஷனல் வனத்தில் செயற்கைத் தடங்களையே பதிவு செய்கிறார்.
செல்லத்துடன் கலந்து கண்டிப்பு காட்டும் தந்தையாக ஆடுகளம் நரேன், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்களைத் தாண்டி கருணாகரன், ஜனனி சமாதானம், 'உறியடி' சிவா, தேவி மகேஷ், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி ஆகியோர் படத்தில் வருகிறார்கள், அவ்வளவே!

அடர்ந்த காட்டின் குளுமையையும் விஷுவல்களில் கொண்டு வந்து கவனம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ரயீஸ் அகமது. சர்வைவல் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்புக் கோணங்களை நிரப்பியதும் சிறப்பு!
படத்தின் முதல் பாதியைப் பரபரப்பு மிகுதியில் கொண்டுசென்றிருக்கும் படத்தொகுப்பாளர் ராணவ், இரண்டாம் பாதி கதையைச் சோலைக்குள் தொலைத்திருக்கிறார். பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் மனநிலையை நமக்கு உணரச் செய்யும் இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகர், பாடல்களில் சோபிக்கவில்லை.
ஆபத்தான பகுதி எனும் பதாகையை மீறி மதிகெட்டான் சோலைக்குள் செல்லும் போட்டோகிராபர் கதாநாயகன், அங்கு அவர் சந்திக்கும் திகில்கள், அங்கிருந்து தப்பிக்க அவர் சந்திக்கும் இன்னல்கள் என்பதாக இக்கதையை விரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான அஷ்ரஃபின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் முழுப் படமும் நகர்கிறது.
மதிகெட்டான் சோலை பற்றிச் சொல்லப்படும் மர்மங்கள், அங்குச் செல்ல வேண்டாம் எனச் சொல்லப்படும் அபாய வார்த்தைகள், அங்குச் சென்றே ஆக வேண்டும் என்கிற நாயகனின் பிடிவாதம் ஆகியவை பதற்றத்தையும், பரபரப்பையும் நம்மிடையே கச்சிதமாக மூட்டுகின்றன.
மதிகெட்டான் சோலையில் சிக்கிய நாயகன், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவை சர்வைவல் த்ரில்லரின் நிறத்தையும் படத்திற்குச் சேர்த்துவிடுகின்றன. ஆனால், அதற்குப் பிறகான திரைக்கதை திகில், ஃபேன்டஸி, சென்டிமென்ட் டிராமா எனப் பல ஜானர் மரங்கள் ஏறிச் சறுக்குகிறது.

அத்தனை பாதைகளில் பயணிக்கும் கதை, நமக்குத் தெளிவாக விளக்கப்படாமல் தப்பிக்கும் முயற்சிகளையே மேற்கொள்கிறது. ஒரு எபிசோடு நம் பொறுமையைச் சீண்டிப் பார்க்கும் நேரத்தில், அடுத்ததாகப் புதிய எபிசோடையும் இணைக்கிறார்கள். நாயகனின் பின்கதை, அவனின் அகச்சிக்கல்கள் என எதிலும் புது விதைகளைப் போடாததால், அது நம்மோடு இணைவதும் சவாலானதாக மாறியிருக்கிறது.
எப்படியோ திசை மாறி மாறி முடிவை எட்டும் படம், லாஜிக் கேள்விகளையும் புதருக்குள் புதைத்து வைத்துவிட்டு ஓடியிருக்கிறது.
தொடக்கத்தில் படம், சர்வைவல் த்ரில்லர் அடித்தளத்தை வலுவாகப் போட்டாலும், அதற்குப் பிறகு பிடிவாதமாக எக்கச்சக்க ஜானருக்குள் டூர் போவதால், இந்த 'போட்டோகிராபர்' நம்மை சர்ப்ரைஸ் செய்யாமலேயே போகிறார்.












.jpg)


