தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ...
Ram & Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா?
திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ரயிலில் பயணிப்பவர், சக பயணியாக வரும் லீலாவை (வர்த்திகா) பார்த்ததும் காதலிக்கத் தொடங்குகிறார்.

அவருக்கும் அதே காதல் இருப்பதை அறிந்து இரு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நோக்கி நகர்கிறது இவர்களின் கதை. ஆனால், லீலா எப்போதுமே மாலை ஆறு மணிக்கு மேல் ரகுவைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆறு மணிக்கு மேல் லீலா என்ன செய்கிறார், அவரின் இந்த ரகசியம் இவர்களின் காதல் திருமணத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை காமெடி டிராமாவாக இழுத்துச் சொல்கிறது இந்த 'ராம் அண்ட் லீலா'.
கதாநாயகனாக முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் ரியோ ராஜ். ஆனால், ஸ்க்ரீனைப் பார்த்து மக்களிடம் முறையிடும் காட்சிகள், சில காமெடி மற்றும் எமோஷன் காட்சிகள் போன்றவற்றில் எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனத்தை களைந்திருக்கலாம். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் நாயகி பாத்திரத்தை முடிந்தளவு சரியாக அணுகியிருக்கிறார் வர்த்திகா. சீரியஸ் அப்பாவாக சேத்தன் ஸ்கோர் செய்ய, மிகை நடிப்பில் சோதிக்கிறார் அம்மாவாக வரும் மாளவிகா அவினாஷ்.

பெண் வீட்டாரில் தீபா வெங்கட் பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம். மா.கா.பா ஆனந்த் காமெடியில் கடுப்பேற்ற, மாமாவாக முனிஷ்காந்த், நாயகனின் தங்கையாக தாஃபியா அபு ஆகியோர் இருப்பைப் பதிவு செய்கின்றனர். முக்கியமானதொரு பாத்திரத்தில் நண்பர் ராமாக பாலாஜி தியாகராஜன் தயாளன்... ஆனால் அவரின் பார்வையைச் சொல்லும் காட்சிகளும், வசனங்களும் மிஸ்ஸிங்!
வண்ணமயமான பிரேம்களில் கொண்டாட்டமாகப் படத்தை நகர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன். YNC சிவாவின் படத்தொகுப்பு ராம் - லீலா கதையின் வேகத்தைக் கூட்டி சுவாரஸ்யப்படுத்த முயல்கிறது. அங்கித் மேனனின் இசையில் 'செப்பு சிலை' பாடல் மட்டும் தாளம்போட வைக்க, பின்னணி இசை காமெடிக்கு கரம் கொடுக்க போராடியிருக்கிறது.
திருமணம் ஆகாத ஆணின் போராட்டங்களுக்கு இடையே ஃபேன்டஸி கோணத்தை நுழைத்து காமெடி விருந்து தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன். நாயகனின் அறிமுகம், அவரின் பாடுகள் எனத் தொடங்கும் படத்தில், மையக்கதை வரும்வரை காமெடி என்ற பெயரில் சோதனையே! நாயகியின் அறிமுகம், ஆறு மணி மர்மம், நண்பனுடனான உரையாடல்கள் போன்றவை சற்றே சுவாரஸ்யம் கூட்டுகின்றன. இடைவேளைக்கு முன்னர் ட்விஸ்ட்கள் வெளிப்படும் இடம் ஓகே என்றாலும் அதைப் படமாக்கிய விதம் படு சுமாரான ஸ்டேஜ் டிராமா கணக்காக நீள்கிறது. ஆள் மாறாட்ட நகைச்சுவை, சுமாரான கவுன்ட்டர்கள் எனப் பழைய டெம்ப்ளேட் ஏணியை வேறு வாங்கி இழநி பறிக்க முயல்கிறார்கள்.

இடைவேளை சுவாரஸ்யப்படுத்த, அடுத்ததாக மிக முக்கியமான நாயகனின் அகப் போராட்டங்களையும், நண்பனின் பார்வையையும் பேசாமல் மருத்துவமனை கலாட்டா, திருமண வீட்டுச் சமாளிப்புகள் எனப் பழக்கப்பட்ட பாதையில் பழைய காமெடியைத் துணைக்கு அழைத்துக்கொண்டே பயணிக்கிறது படம். நாயகியின் பிரச்னை, அவரின் குடும்ப ரகசியம் மட்டுமே புதுசு! ஆனால், அந்த உலகின் லாஜிக்கையும் சரியாகக் கோர்க்காமல் இஷ்டத்துக்கு வசனங்களால் சமாளிக்க முயல்கிறார்கள். அந்த இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சி எபிசோடுகளும் இந்தப் படத்துக்கு எதுக்கு சாரே?!
புதியதொரு ஐடியா என்றாலும், பழைய பேப்பரைப் புரட்டியே காமெடி செய்வதால் லீலா - ராம்களின் கதை மனதில் இடம்பெற மறுக்கிறது.
















