RCB vs CSK: "நான் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றை (ஏப்ரல் 5) 11-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிம் டேவிட்டின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி, சர்பராஸ் கானின் அதிரடி அரைசதம் மற்றும் பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் ஆகியோரின் போராட்டத்திற்கு மத்தியிலும், 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "உண்மையைச் சொல்லப்போனால், இன்றைய ஆட்டத்தின் முடிவு எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் மற்றும் ஓரளவிற்கு சிவம் துபே ஆகியோரின் ஆட்டம் பாராட்டுக்குரியது. பேட்டிங் முன்வரிசையில் நான் இன்னும் கூடுதல் பங்களிப்பை அளித்திருந்தால், ஒருவேளை இந்த இலக்கை நாங்கள் எட்டியிருக்கக்கூடும்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விராட் கோலி கொடுத்த அந்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஆட்டத்தின் வேகம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும்.
இருப்பினும், 13 மற்றும் 14-வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது, அதன் பிறகுதான் ஆட்டம் தலைகீழாக மாறியது. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் டிம் டேவிட்டின் ஆட்டம், ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றியது.
அன்ஷுல் வீசிய அந்தப் பந்து நோ-பால் பந்தாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது. அதன் பிறகு டிம் டேவிட் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்தார். அவரது அந்த அதிரடி ஆட்டத்திற்குப் பாராட்டுகள்" என்று பேசியிருக்கிறார்.



















