`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ர...
TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!
டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திரும்பப்பெற வேண்டுமென நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் காலிபாட்டில்களை சேகரிக்க நவீன மெஷின் ஒன்று இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் நாளே மெஷின் முறையாக வேலை செய்யாததால் மதுபிரியர்கள் கோபமடைந்து விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினர்.

நீதிமன்றம் காலிபாட்டில்களை திரும்பப்பெற உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், காலிபாட்டில்களை திரும்பப் பெறுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறதென டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர். காலிபாட்டில்களை சேகரிக்கும் நடைமுறைக்கு எதிராக போராட்டமும் நடத்தியிருக்கின்றனர். இதை சரி செய்ய சோதனை அடிப்படையில் மது பாட்டில்களை சேகரிக்கும் மெஷின் ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சோதனை முயற்சியாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அந்த மெஷின் இன்று முதல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெஷினில் முதலில் நம்முடைய ஜிபே QR கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், காலிபாட்டிலில் உள்ள QR கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பின் பாட்டிலை மெஷினுக்குள் போட்டால் பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்படும் அந்த 10 ரூபாய் நம்முடைய அக்கவுன்ட்டில் ஏறிவிடும். இதுதான் நடைமுறை. ஆனால், முதல் நாளான இன்றே அந்த மெஷின் கோளாறானது. பல காலிபாட்டில்களை அந்த மெஷினால் ஸ்கேன் செய்யவே முடியவில்லை. ஏற்கெனவே போதையில் இருக்கும் மதுபிரியர்கள், ஒரு முறை போனை இன்னொரு பாட்டிலை என அடுத்தடுத்து ஸ்கேன் செய்யவும் தடுமாறுகின்றனர்.

தட்டு தடுமாறி ஸ்கேன் செய்தாலும் `உங்களின் QR கோர்டு தவறாக உள்ளது' என பாட்டிலை ஏற்க மறுப்பதால் எரிச்சலாகும் மதுபிரியர்கள், டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்துக்குச் செல்கின்றனர். '10 ரூபாய் கூடுதலாய் வாங்குறதை நிறுத்த முடியல, அதை வாங்குறதுக்கு இப்படி ஒரு மெஷின் வேற...அதுவும் ஓட்டை மெஷினை வச்சுருக்கானுக, யார் வந்தாலும் எதுவும் மாறாது' என தலையில் அடித்து கொதித்துப் போய் பேசிவிட்டுச் செல்கின்றனர் மதுபிரியர்கள்.

மெஷினை நிறுவியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் பேசுகையில், 'முதல் நாள் என்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது சோதனை முயற்சிதான். குறைகளை விரைவில் சரி செய்வோம்' என்கின்றனர்.
`மன உளைச்சல்ல குடிக்க வந்தா இன்னும் மன உளைச்சல் ஆக்குறீங்களேடா!' என விசும்பிச் செல்கின்றனர் மதுபிரியர்கள்.














