பசி, போர் முதல் தெருவோர மனிதர் வரை! – AI யுகத்தில் நாம் தொலைக்கக் கூடாத மனிதக் க...
TNPL 2026: திண்டுக்கல்லை சிதறவிட்ட ராஜ்குமார்… டிஎல்எஸ் முறையில் அசத்தலாக வென்ற திருச்சி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மழை குறுக்கிட்ட ஒரு பரபரப்பான இரவு. டிஎன்பிஎல் 2026 தொடரின் 22-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த திருச்சிக்கு தொடக்கமே அதிரடி தான். கே. ராஜ்குமார் – ஜே. சுரேஷ் குமார் பார்ட்னர்ஷிப் திண்டுக்கல் பந்துவீச்சை சிதறடித்தது. ராஜ்குமார் களத்தில் இருந்த நேரம் முழுவதும் திண்டுக்கல் பந்துவீச்சாளர்களுக்கு நிம்மதி இல்லை. ஒரு பக்கம் சுரேஷ் குமார் பவுண்டரிகளால் ஸ்கோரை நகர்த்த, மறுபக்கம் ராஜ்குமார் கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ராஜ்குமார் 42 பந்துகளில் 71 ரன்களும், சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர்.
மழையால் ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையிலும், திருச்சி தனது அதிரடியைக் குறைக்கவில்லை. சஞ்சய் யாதவ் 33 ரன்களும், ஜாபர் ஜமால் 21 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் 197/4 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது திருச்சி.
அதன்பிறகு மைதானத்தில் மழை மட்டுமல்ல… டிஎல்எஸ் கணக்கும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 197 ரன்களைத் துரத்த வேண்டிய திண்டுக்கலுக்கு மழைக்குப் பிறகு டிஎல்எஸ் முறையில் 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த ஓவர்களில் அந்த இலக்கை எட்ட வேண்டிய சூழல், திண்டுக்கல் பேட்டர்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்றியது.

199 என்ற இலக்கைத் துரத்திய திண்டுக்கல்லுக்கு சிவம் சிங் 47 ரன்களும், பாபா இந்திரஜித் 32 ரன்களும், ஆர்.கே. ஜெயந்த் 34 ரன்களும் எடுத்து போராடினர். ஆனால் திருச்சியின் பந்துவீச்சு அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே சென்றது. குறிப்பாக கே. ஈஸ்வரன் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டனி தாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
19 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் 170/8 மட்டுமே எடுக்க, டிஎல்எஸ் முறையில் திருச்சி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை 71 ரன்கள் விளாசிய கே. ராஜ்குமார் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.



















