`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செ...
காலே டெஸ்ட்: 372 ரன்கள் இலக்கு… 206-க்கே ஆல் அவுட்டான இலங்கை – அபார வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!
காலே மைதானத்தில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. ஒருபுறம் வெற்றியைத் துரத்திக் கொண்டிருந்தது இலங்கை… மறுபுறம் வெற்றிக்காக விக்கெட்டுகளை வேட்டையாடிக்கொண்டிருந்தது இந்தியா!
ஸ்கோர்போர்டில் 372 ரன்கள் என்ற இலக்கு இருக்க, ஒவ்வொரு விக்கெட்டும் இந்தியாவின் வெற்றியை நெருங்கச் செய்தது. இறுதியில் இந்தியப் பந்துவீச்சின் சுழலில் சிக்கிய இலங்கை, 206 ரன்களுக்குச் சுருண்டது. 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது!
ஆனால் இந்த வெற்றியின் கதை ஐந்தாம் நாளில் தொடங்கவில்லை.

முதல் நாளிலேயே இந்திய பேட்டர்கள் அதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார்கள். முதல் நாள் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல், இலங்கை பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ரன்களைக் குவித்தார்.
பொறுமையும் நம்பிக்கையும் கலந்த ஆட்டத்தில் 167 ரன்கள் விளாசி, இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற கே.எல். ராகுல் 82 ரன்கள் சேர்த்தார்.
படிக்கல்–ராகுல் கூட்டணி கொடுத்த நம்பிக்கையால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 462 ரன்களை எட்டியது. இதனையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் தினுஷாவின் அதிரடி சதத்தால் 284 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது நாளில் இந்தியா இலங்கைக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரிஷப் பண்ட், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிர வைத்தார்.
இந்தப் போட்டியில் தனது சிக்ஸர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 193 ரன்கள் சேர்த்து, இலங்கைக்கு 372 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை வெற்றியை நோக்கி நகர முயன்ற நேரத்தில், இந்தியாவின் சுழல் தனது வேலையைத் தொடங்கியது. மானவ் சுதார் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் நம்பிக்கையை சிதைத்தார்.
போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகள் என்ற அசத்தல் பந்துவீச்சுடன் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா, 4,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இந்தச் சாதனையை எட்டிய உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.
இறுதியில் 206 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் செய்து 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இது இந்தியா பங்கேற்ற 600வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 1–0 என இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.



















